
நாகை மாவட்டத்தில் சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரி- தமிழக எல்லைப் பகுதியான வாஞ்சூரில் சோதனை சாவடி அமைந்துள்ளது. இது நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. நாகூர் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்துவதாக புகார் எழுந்தது. இதனை தடுப்பதற்காக திருமுருகன் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கும்பகோணத்திலிருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் நீண்ட நேரம் நீயும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையறிந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கினார். ஒருமையில் பேசியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட நபரை இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினார். அப்பொழுது காவல் வாகனத்திற்குள்ளே பூட்ஸ் காலால் அந்த நபரின் முகத்தில் எட்டி உதைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலானது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் பழனிவேல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.