Skip to main content

இளைஞர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; முன்னாள் காதலியிடம் போலீஸ் தீவிர விசாரணை

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Police investigation of youth's ex-girlfriend in case of passed away

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரான இளைஞர் செல்லத்துரை கடந்த 28 ஆம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் குளக்கரையில் பிணமாக கிடந்தார். இது அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

 

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரையின் முன்னாள் காதலி ஒருவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “திருமணத்திற்கு முன்பு செல்லதுரையும் நானும் காதலித்தோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது குடும்பத்தினர் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். எனது கணவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் எனது சகோதரியை எனது கணவரின் அண்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். எனது சகோதரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எனது சகோதரி இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று திருமணம் செய்து கொண்டு தனி வாழ்க்கை நடத்துகிறார். அவரது இரண்டு குழந்தைகளும் திக்கற்ற நிலையில் இருந்தனர். அந்த குழந்தைகளையும் நான் வளர்த்து வருகிறேன்.

 

இந்த நிலையில் எனது முன்னாள் காதலன் செல்லத்துரை என்னை தேடி வந்ததால் தனிமையில் இருந்தோம். அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி என்னிடம் வந்து மிரட்டினார். சம்பவத்தன்று இரவு எனது வீட்டுக்கு வந்த செல்லத்துரை வீடியோ காட்சிகளை காட்டி என்னை தனிமையில் அழைத்தார். நான் இனிமேல் இதுபோல் உறவு வேண்டாம் எனது கணவர் எனது சகோதரி அவரது குழந்தைகளை நான் காப்பாற்ற வேண்டும் நீ இங்கிருந்து போய் விடு இனிமேல் இங்கு வரக்கூடாது என்று எடுத்துக் கூறினேன். அவரது ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். உடனே நானும் உனது தொல்லையை தாங்க முடியவில்லை நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அவருக்கு முந்தி வேறொரு அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள தூக்கு மாட்டினேன். இதற்குள் செல்லத்துரை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பயந்து போன நான் எனது உறவினர்கள் மூன்று பேர் உதவியுடன் இறந்து போன செல்லத்துரையின் உடலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை பின்புறம் உள்ள குளக்கரை பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிட்டோம்” என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதோடு செல்லதுரையின் உடலை தூக்கி வந்த மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். செல்லத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்கிறார்கள் போலீசார். இருந்தும் செல்லத்துரை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.