Police investigation for 2.5 crore in bank account

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெ.பெரியாங்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி மற்றும் கொலை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில் தான் இவர் முத்தாண்டி குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார்.

Advertisment

இவரின் வங்கிக் கணக்கில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என ஒரே மாதத்தில் 2.5 கோடி ரூபாய் இவரின் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரவுடி அசோக் குமாரின் வங்கி கணக்கை கனரா வங்கி முடக்கி உள்ளது. அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்த ரவுடி அசோக் குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை 7 பேருக்கு அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அசோக் குமார் தலைமறைவாகியுள்ளார். கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடி வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.