Skip to main content

காவலரை தாக்கிவிட்டு தப்பியோடிய கைதி திருப்பத்தூரில் சிக்கினார்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

police incident in thirupathur

 

ஆத்தூரில், பாதுகாப்புக்குச் சென்ற தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள காட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்கரவர்த்தி (25). நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் இவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இந்திலியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

 

இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உத்தரவின்பேரில், எஸ்ஐ சுப்ரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் முஸ்தபா, சிவராமன் ஆகியோர் ஜன. 23ம் தேதி நாமக்கல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர்.

 

police incident in thirupathur

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் வந்தபோது, சக்கரவர்த்தி தனக்கு அவசரமாக சிறுநீர் வருவதாக கூறினார். அதை நம்பிய காவல்துறையினர் அவரை பேருந்து நிலைய பின்புற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்ஐ சுப்ரமணியன், மற்றொரு கைதிக்குப் பாதுகாவலாக பேருந்து நிலையத்திலேயே இருந்தார்.

 

இதையடுத்து, பாதுகாப்புக்கு வந்த காவலர்களுள் ஒருவரான முஸ்தபாவை தாக்கிவிட்டு, சக்கரவர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை துரத்திப்பிடிக்க ஓடியபோது தலைமைக் காவலர் முஸ்தபா கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். 

 

இந்தச் சம்பவத்தை அடுத்து மற்றொரு கைதியை, எஸ்ஐ சுப்ரமணியன் உடனடியாக சின்னசேலம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார். தப்பிச்சென்ற சக்கரவர்த்தியை பிடிக்க ஆத்தூர், சின்ன சேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் ஜன. 26ம் தேதி அதிகாலையில் அங்கு சென்று சக்கரவர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.