Skip to main content

பெண் எஸ்.ஐ.- காவலர் மோதல் விவகாரம்; இன்ஸ்பெக்டர், காவலர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! 

Published on 03/07/2022 | Edited on 03/07/2022

 

police incident salem district sp office order

 

வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.க்கும், பெண் காவலருக்கும் ஏற்பட்டுள்ள நீயா? நானா? மோதல் விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உண்மையில், இந்த காவல்நிலையத்தில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க, ஆய்வாளர், காவலர்களை வரும் திங்கள்கிழமை (ஜூலை 4) நேரில் ஆஜராகும்படி எஸ்.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இதே காவல்நிலையத்தில் கிரேடு&1 காவலராகப் பணியாற்றி வருகிறார் சசிகலா (வயது 38). 

 

பெண் காவலர் சசிகலா, துறை ரீதியான பணிகளை சரிவர செய்வதில்லை; உயர் அதிகாரிகள், சக காவலர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் ஆகியோரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எஸ்.ஐ., மல்லிகா, மாவட்ட எஸ்பிக்கு, கடந்த மே மாதம் ஓர் அறிக்கை சமர்ப்பித்து இருந்தார். 

 

இந்த விவகாரம் தொடர்பாக வாழப்பாடி உள்கோட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''பெண் காவலர் சசிகலா, வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணியில் சேர்ந்தார். ஒரே மாதத்தில் அவருக்கும் மல்லிகா எஸ்.ஐ.க்கும் ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது. 

 

கடந்த ஆண்டு செப்., மாதம் போக்சோ வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் சசிகலா. எல்லா பணிகளும் முடிந்த பிறகு அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

 

மறுநாள் பகல் அவரை தொடர்பு கொண்ட மல்லிகா எஸ்.ஐ., டி.எஸ்.பி. போனில் பேசினால், நாம் இருவரும் சேலம் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லிவிடு என சொல்லி இருக்கிறார். ஆனால், டி.எஸ்.பி. அவருடைய செல்போன் லைனில் வந்து விசாரித்தபோது, தான் வீட்டில் இருப்பதாக சசிகலா உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். இதையறிந்த மல்லிகா எஸ்.ஐ., நான் சொன்னதுபோல் டி.எஸ்.பி.யிடம் சொல்லாமல் எதற்காக மாட்டிவிட்டீங்க? அவருடைய ஃபோனை எடுக்காமல் விட்டிருக்கலாமே... நான்தான் இப்போது மாட்டிக்கொண்டேன்... எனச் சொல்லி இருக்கிறார். இங்குதான் எஸ்.ஐ.க்கு., சசிகலா மீது முதல் மோதல் ஏற்பட்டது. 

 

அடுத்த இரண்டு நாளில், வாழப்பாடி (ச/ஒ) காவல்நிலையத்தில் நடந்த 'ரோல் கால்' நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. முத்துசாமி கலந்து கொண்டார். அதில், வாழப்பாடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, எஸ்.ஐ., மல்லிகா, காவலர்கள் சசிகலா, மேனகா, சங்கீதா ஆகியோரும் ஆஜராகினர். 

அப்போது, டி.எஸ்.பி. முத்துசாமி, பகிரங்கமாகவே மல்லிகா எஸ்.ஐ.யை திட்டியுள்ளார். நீங்கள் முதலில் எஸ்ஐக்கான பணியைச் செய்யுங்கள். என்னுடைய ஃபோனை எடுக்காமல் விட்டுவிடும்படி எதற்காக காவலர் சசிகலாவிடம் சொன்னீங்க? எனக்கேட்டு காச்மூச் என்று சத்தம் போட்டுள்ளார். உங்களுக்கு பர்மிஷன் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்... உங்களுக்கு நீங்கள் நடத்தும் பேக்கரியில் வேலை இருந்தால் தாராளமாக போய்ப் பாருங்கள் என்றவர், ஆய்வாளர் தனலட்சுமியிடம், நீங்களும் உங்கள் பைனான்ஸ் கம்பெனி வேலையைப் பாருங்கள் என்று திட்டியுள்ளார். 

 

எல்லா காவலர்கள் முன்பும் டி.எஸ்.பி. இப்படி திட்டியதற்கு சசிகலாதான் காரணம் எனக் கருதி, அவர் மீது மேலும் அதிருப்தி அடைந்தார் மல்லிகா. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், அடுத்த ஓரிரு நாளில் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் நடப்பு ஆண்டு, பிப்., 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாள்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிக்குச் சென்றிருந்த காவலர்கள் சசிகலாவும், சங்கீதாவும் எஸ்.ஐ.யிடம் அனுமதி பெறாமல் ஓய்வுக்குச் சென்றுவிட்டனர். 

 

அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் வைரமணி என்பவரிடம் சொல்லிவிட்டுதான் அவர்கள் ஓய்வுக்குச் சென்றிருந்தனர். இது நடைமுறையில் உள்ளதுதான். ஆனாலும் தன்னிடம் சொல்லவில்லை எனக்கூறி, சசிகலாவை மட்டும் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகச் சொன்னார் மல்லிகா எஸ்.ஐ. ஆனால் சங்கீதாவை மட்டும் அவர் ஏதும் சொல்லவில்லை.  

 

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சசிகலா, அங்கு ஒன்றரை மணி நேரம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் டி.எஸ்.பி. முத்துசாமி, உன்னை மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ள வேண்டுமானால் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக எழுதிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட சசிகலா, டி.எஸ்.பி. சொன்னபடியே எழுதிக் கொடுத்துவிட்டு பணிக்குத் திரும்பி இருக்கிறார். 

 

உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்தும், வாழ்வாதாரம் கருதியும் அவர் எழுதிக் கொடுத்த விளக்கக் கடிதத்தைதான் மல்லிகா எஸ்.ஐ., சசிகலாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, அறிக்கை அளித்திருக்கிறார்,'' என புட்டு புட்டு வைக்கின்றனர் காவல்துறையினர். 

 

மல்லிகா எஸ்.ஐ.யின் ஈகோ குறித்தும் காவலர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். வாழப்பாடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, முதலில் காவலராகதான் பணியில் சேர்ந்தார். பின்னர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று 2008- ஆம் ஆண்டு எஸ்.ஐ. ஆனார். தற்போது இன்ஸ்பெக்டராக உள்ளார். 1991- ல் காவலராக பணியில் சேர்ந்த மல்லிகா, தற்போது எஸ்.ஐ. ஆக உள்ளார். தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் ஜூனியராக உள்ளதாலேயே தனலட்சுமியை மேடம் என்று இதுவரை அழைத்ததில்லை.

police incident salem district sp office order

தன்னை மேடம் என்று அழைக்க வேண்டும் என்று ஆய்வாளர் தனலட்சுமி கூறியபோது, அப்படி அழைக்கும்படி அரசாணை ஏதும் இருக்கிறதா? என தடாலடியாக கேட்டு அவரை வாயடைத்துவிட்டார். இதனால் நொந்து போன தனலட்சுமி, நான் காவல்நிலையத்தில் இருக்கும்போது மல்லிகாவை யாரும் மேடம் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

 

ஒருமுறை, போக்சோ வழக்கு ஒன்றில், குற்றவாளியின் பெயரை மாற்றி எழுதி, எப்ஐஆர் பதிவு செய்து விட்டார் மல்லிகா. இவர் செய்த தவறுக்கு, ஆய்வாளர் தனலட்சுமிக்கு தமிழ்நாடு காவலர் சார்நிலைப் பணியாளர்கள் விதிகள் 1956, பிரிவு 3 (ஏ)ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள் காவல்துறையினர். 

 

மல்லிகா எஸ்.ஐ., மேடம் என்று அழைக்காதது குறித்து ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, ''சார்... வயதிலும், சர்வீஸிலும் அவர்தான் சீனியர். அவர் மேடம்னு கூப்பிடாததைப் பற்றி நான் பெரிசா எடுத்துக்கல. மத்தபடி எதுவும் இல்லைங்க சார்... அவர் கேப் அணிந்துதான் வணக்கம் செலுத்துவார்... மத்தபடி ஒண்ணுமில்லீங்க சார்...,'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

 

வாழப்பாடி மகளிர் காவல்நிலைய விவகாரங்கள் குறித்து, அப்போதைய டி.எஸ்.பி. முத்துசாமியிடம் கேட்டபோது, ''மகளிர் காவல்நிலைய விவகாரங்களை எல்லாம் அங்குள்ள இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொள்வார் என்பதால், அதை பெரிதாக கண்டுகொள்தில்லை. 

 

காவலர் சசிகலா மீது ரிப்போர்ட் வந்தது. அவங்களும் கொஞ்சம் சரியில்லீங்க சார். மறுபடி மறுபடி அவர் மீது ஏதோ பிரச்னை வந்துகொண்டே இருந்தது. அவர் கரெக்டாக டூட்டிக்கு வர்றதில்ல.... போறதில்லனு புகார் இருக்கு. நாங்களே அதுபற்றி 3 மாதம் கழித்துதான் ரிப்போர்ட் அனுப்பி இருக்கோம். அது விசாரணையில் இருக்கு சார்...,'' என்றார். 

 

இது ஒருபுறம் இருக்க, வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க, ஆய்வாளர் தனலட்சுமி, காவலர்கள் மேனகா, வைரமணி ஆகியோரை வரும் திங்கள்கிழமை (ஜூலை 4) நேரில் ஆஜராகும்படி எஸ்.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும், மல்லிகா எஸ்.ஐ. மற்றும் காவலர் சசிகலா ஆகியோரிடையேயான மோதல் விவகாரம் குறித்து விசாரித்து, விரிவான தனி அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

 

இதுகுறித்து காவலர் சசிகலாவிடம் கேட்டபோது, ''எனக்கு இடப்பட்ட பணிகளை சரியாகத்தான் செய்து வருகிறேன். கடந்த 9 மாதத்திற்கு முன்பு, குறிப்பிட்ட ஓரிடத்தில் பணியில் இல்லாமலேயே தான் அங்கு பணியில் இருப்பதாக டிஎஸ்பியிடம் சொல்லச் சொன்னார் எஸ்.ஐ. மல்லிகா. நான் பொய் சொல்ல விரும்பாமல் உள்ளதை உள்ளபடி சொன்னேன். அங்கு ஆரம்பித்த வன்மம்தான் என் மீது அவர் தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை,'' என்றார். 

 

சசிகலா மீதான குற்றச்சாட்டு குறித்து, எழுத்து மூலம் உரிய விளக்கம் அளிக்கும்படி அவருக்கு எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், ஜூன் 23- ஆம் தேதி, குற்றச்சாட்டு குறிப்பாணை அளித்துள்ளார்.

 

வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.க்கும், காவலருக்கும் ஏற்பட்ட மோதல்தான் தற்போது சேலம் மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.