Skip to main content

வேட்பாளரின் பணமா? வியாபாரி கடத்தலின் பின்னணியை மறைத்த போலீஸ்...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். அதே ஊரில் மரசெக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து தரும் வேலை செய்து வருகிறார். கலசப்பாக்கம், போளுர், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள நிலங்களில் உள்ளுர், வெளியூரை சேர்ந்தவர்கள் பல தரப்பினரும் வந்து சீட்டு ஆடுவது வழக்கம். லட்சங்களில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள்.

 

saravanan


சரவணன் சீட்டு விளையாடுவார், கலசப்பாக்கம் பகுதிகளில் சீட்டு விளையாட செல்லும்போது, அங்கு சீட்டு விளையாட வரும் திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்துல்அலி என்பவரின் 30 வயதான அன்சர்அலி பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துள்ளனர்.



இந்நிலையில் ஏப்ரல் 28ந் தேதி மதியம் திருவண்ணாமலை சென்று வருவதாக குணவதியிடம் கூறிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண் சுச்-ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 29ந் தேதி புகார் தந்துள்ளார் குணவதி.



30ந் தேதி மதியம் குணவதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புக்கு கொண்ட ஒருவர், உன் கணவனை கடத்திவைத்துள்ளோம், அவனை விடவேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் தரவேண்டும் எனச்சொல்லி செங்கம் அருகே உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே வரச்சொல்லியுள்ளார்கள். இந்த பெண்மணியும் 15 லட்ச ரூபாய் பணத்தோடு சென்று காத்திருந்துள்ளார்.



டி.என்.25 பி8181 என்கிற இன்னோவா காரில் வந்த இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவார் எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் போன் செய்து ரூ 25 லட்சம் வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளார் ஒருவர். இதில் அதிருப்தியான குணவதி, தான் பணம் தந்தது, அவர்கள் பேசிய செல்போன் எண், பணம் வந்து வாங்கி சென்றவர்களின் கார் பதிவு எண் போன்றவற்றை காவல்துறையிடம் கூறியுள்ளார்.

 

saravanan


திருவண்ணாமலை எஸ்.பி., சி.பி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி-கள் அண்ணாதுரை, குற்றாலலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டன. செல்போன் எண்கள், வண்டி எண்ணை வைத்து முகவரி, அந்த வாகனங்கள் சென்ற வழி, சிசிடிவி கேமரா என சோதனை செய்து வந்தனர். அதோடு, அவர்கள் கேட்ட தொகை செங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கொண்டு வந்து தரும்படி குணவதியிடம் கூறியுள்ளனர். அவரும் மே 1ந் தேதி பணத்தோடு அங்கு நின்றுள்ளார். அவரை சுற்றி மப்டியில் போலீஸார் இருந்துள்ளனர். டி.என் 25 பி.எல் 0023 என்கிற எண்ணுடைய காரில் ஒருவர் வந்து குணவதியிடம் பேசி பணம் வாங்கும்போது, மப்டியில் இருந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அன்சர் அலி என தன்னைப்பற்றி கூறியுள்ளார்.
 


அவர் தந்த தகவலின்பேரில் வேட்டவலம் அருகே சரவணனை அடைத்துவைத்திருந்ததை கண்டறிந்து காப்பாற்றினர் போலீசார். கடத்தி வைத்து இருந்த முஸ்தபா, தஸ்தகீர், இந்தியாஸ், துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், 6 செல்போன்கள், கத்தி போன்றவற்றையும், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் எஸ்.பி., சி.பி. சக்கரவர்த்தி தெரிவித்தார்.
 


இதில் போலீஸார் மறைத்த தகவல்கள் இது என அரசியல் வட்டாரத்தில் கூறுவது. அந்த பணம் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளருடையது. அவர் சரவணனிடம் தேர்தலின்போது, ஓட்டுக்காக தந்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணம் பற்றி தனது நண்பர் அன்சர்அலியிடம் கூறியுள்ளார். தேர்தல் செலவுக்கு தந்தது போக மீதி பணம் என்னிடம் தான் உள்ளது எனக்கூறியுள்ளார். அதனை தெரிந்துக்கொண்டே சரவணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இதனை வெளியே சொல்லாமல் போலீஸ் மறைத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கடத்தல் கும்பலில் இருந்த முஸ்தபா என்பவர், திருவண்ணாமலையில் பிரபலமான ஒரு மசூதியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அவரின் குற்றச்செயல்களை அறிந்த ஜமாத்தினர், இது தொடர்பாக கேள்வி எழுப்ப சமீபத்தில் தான் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.