Skip to main content

திருடிய நகைகளை விற்று கோவாவுக்கு இனபச்சுற்றுலா; சுற்றி வளைத்த போலீஸ்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Police have arrested a thief who was hiding in Goa after stealing jewellery

 

கிருஷ்ணகிரியில் நகை திருட்டில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த பலே திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சதீஸ்குமார் (25) ஈடுபட்டு இருப்பதும், கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.     

 

இதையடுத்து கோவா விரைந்த தனிப்படையினர், சதீஸ்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், ஏற்கனவே கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரில் சிவக்குமார் என்பவர் வீட்டில் 18 பவுன் நகைகள், பழைய பேட்டையில் அம்மு என்பவர் வீட்டில் 5 பவுன் நகைகள், காவேரிப்பட்டணத்தில் தனலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகைகள் என மொத்தம் 30 பவுன் நகைகளைத் திருடியிருப்பது தெரிய வந்தது. திருடிய நகைகளை சதீஸ்குமார் அவருடைய நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்ரம், அப்பு என்கிற விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்ததை தனிப்படை காவல்துறையினர் கண்டறிந்தனர். சதீஸ்குமார் மற்றும் அவருடைய நண்பர்களிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள 80 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.   

 

திருடிய நகைகளை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, அதில் கோவாவுக்கு அடிக்கடி ஜாலியாக சுற்றுலா செல்வதை சதீஸ்குமார் பொழுதுபோக்காக வைத்திருப்பதும் தெரிய வந்தது. திருட்டுச் சம்பவத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆளாக களமிறங்கும் சதீஸ்குமார், திருடிய நகைகளை பாதுகாப்பாக வைத்திருந்த நண்பர்களுக்கும் மோட்டார் சைக்கிள், செல்போன் எனக் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இதையடுத்து சதீஸ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.