Skip to main content

கொள்ளையனை தூங்க வைத்த டி.ஆர்; திருட வந்த இடத்தில் சுவாரஸ்யம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

police have arrested thief who fell asleep listening T rajendar song place theft.

 

திருட வந்த இடத்தில் டி.ஆர் பாடலைக் கேட்டு அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தற்பொழுது காரைக்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியன் தன் சொந்த ஊரான நடுவிக்கோட்டைக்கு திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். மேலும், இங்கு குடும்பத்தோடு வந்து தங்கினால் வீட்டில் சமைப்பதற்கான பாத்திரங்கள் மற்றும் குத்து விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறை மட்டும் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த அறைக்குள் திருடன் இருப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வீட்டின் உரிமையாளர் பாண்டியனுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவ அனைவரும் மிளகாய்ப் பொடி, கம்பு கட்டையுடன் வீட்டைச் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசும் பாண்டியன் குடும்பத்தினரும் மூடப்பட்டிருந்த மற்றொரு கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், அங்கிருந்த கட்டிலில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை எழுப்பி விசாரித்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுதந்திர திருநாதன் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற நிலையில், சமீபத்தில் தான் ரிலீஸாகி வந்துள்ளார். இதனிடையே, பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட சுதந்திர திருநாதன், ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின்விசிறி, வெண்கலப் பொருட்கள் என அனைத்தையும் சாக்குப் பையில் பத்திரமாகக் கட்டி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு, மது அருந்திய சுதந்திர திருநாதன், ஹெட்ஃபோனில் TR ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, அங்கிருந்த மெத்தையில் சுதந்திரமாகத் தூங்கியுள்ளார். இவர், ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கியதால் வெளியே சத்தம் போட்டது கேட்கவில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சுதந்திர திருநாதனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், சிவகங்கை மக்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான் என்பவர் தனது கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.