கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூடிய தமிழ அரசு பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு தளர்வு கொடுத்தது. அதேபோல கரோனா தொற்று உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டாலும் இப்போது அதுவும் இல்லை.
ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வர்த்தக அமைப்புகளே முடிவெடுத்து ஒரு வாரம் 10 நாட்கள் எனக் கடைகளை மூடி பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் இந்தக் கட்டுப்பாடு டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் இல்லை.
இந்த நிலையில் தான் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுஅடைப்பு என தமிழக அரசு அறிவித்தது. இந்த நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடை மூடினாலும் முதல்நாளே விற்பனை அதிகரித்திருந்தது. அதாவது கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்களே பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்று முழு ஊரடங்கு நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.
புதிதாகப் பொறுப்பேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவட்டம் முழுவதும் பல சிறப்புப்படை போலீசாரை ரகசியமாக அனுப்பி கள்ள மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து பல நூறு மதுப்பாட்டில்களையும் பணத்தையும் பறிமுதல் செய்தார்.
இந்தநிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள 35 காவல்நிலைய அதிகாரிகளுக்கும் ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தங்கள் பகுதியில் ஊரடங்கு நாளில் மது விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் காவல் சரகத்தில் மது, கஞ்சா, மணல், சீட்டாட்டம் போன்ற குற்றச்செயல்களை தடுக்க அறிவுறுத்தியும் தடுக்க தவறிவிட்டீர்கள். அதனால் உங்கள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இதற்கான விளக்கத்தை 3 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அனுப்ப வேண்டும் தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் புது எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையாக இந்த நோட்டிஸ் சென்றுள்ளதால் காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மாவட்ட மக்களோ எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்கிறார்கள்.