Skip to main content

போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.50 கோடியை திரும்ப பெற்றுத் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

மக்களவை தேர்தலையொட்டி நடந்த வாகன தணிக்கையின்போது பிடிபட்ட 1.50 கோடியை திரும்ப பெற்று தருவதாக, போலீசிடம் பணத்தை பறிகொடுத்த நபரிடமே மேலும் 36 லட்சத்தை அபகரித்த நபரை ஈரோடு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

money



சென்னை விருகம்பாக்கம் சேர்ந்த முகமது ரியாஜூதீன் சென்ற சில வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சந்தோஷ்பால். கத்தார் நாட்டில் இவர் வசிக்கிறார். இந்த சந்தோஷ்பாலின் உறவினர் மாத்யூஸ். மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் இவருக்கு சொந்தமான இடத்தை விலை பேசி அதன் முன்பணமாக ரூ.1.50 கோடி ரூபாயை கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ந் தேதி ஒரு காரில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மாத்யூவின் சகோதரர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது நடந்த மக்களவை தேர்தலையொட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வரும்போது ரூ.1.50 கோடி பணத்தை தனிக்கை செய்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக தனது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் என்ற ஊரைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் சந்தோஷ்பால் தகவல் கூறி உள்ளார்.

அப்போது வெங்கடேஷ், ''தனக்கு மத்திய அரசு அதிகாரிகள் பழக்கம் உள்ளது, ஐஆர்எஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆகவே போலீஸ் பறிமுதல் செய்த பணத்தை அப்படியே மீட்டுக்கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார். பணத்தை அப்படியே திரும்ப பெற வேண்டும் என்றால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் தர வேண்டும், அதற்கு எவ்வளவு என பேசிவிட்டேன். குறைந்தது ரூ.35 லட்சம் கொடுக்கனும், இதை செய்து கொடுக்கிற எனக்கு ரூ.1 லட்சம் என்று கூறியிருக்கிறார்.

இதை அப்படியே நம்பிய ரியாஜூதீன், சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் ரூ.36 லட்சம் பணத்தை வெங்கடேஷின் கணக்கிற்கு அப்போது அனுப்பி வைத்துள்ளார். ரூ.36 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் போலீசார் பறிமுதல் செய்த ரூ.1.50 கோடி பணத்தை பல மாதமாகியும் மீட்டுக்கொடுக்கவில்லை. மீட்பதற்காக கொடுக்கப்பட்ட ரூ.36 லட்சத்தையும் அவர்களுக்கு  திரும்ப கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றியதோடு பல முறை பணத்தை கேட்டும் திருப்பிக்கொடுக்காமல் இருந்ததோடு தனது பவர் மத்திய அரசு வரை உள்ளது என்று கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார் வெங்கடேஷ்.

இதை தொடர்ந்து  ரியாஜூதீன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னை சலீம் என்பவரையும் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி பேர்வழி எத்தனை பேரை இதைப்போல ஏமாற்றினான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.