Skip to main content

உக்ரைனில் தமிழக மாணவர்கள் சித்திரவதை; போலீஸை நாடிய பெற்றோர்!

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

police Complaint against those who cheated by buying tickets medical college

 

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயியான இவர் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றியும் வருகிறார். இவருடைய மகன் கவியரசு எம்பிபிஎஸ் படிப்பிற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சாமிநாதன் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும்போது அறிமுகமான ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியைச் சேர்ந்த ஆவினில் தற்காலிகமாக ஊழியராக வேலை பார்க்கும் தனலட்சுமி(52) என்பவரிடம் மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு தனலட்சுமி தனது மகன் ஜோகித் ஆதித்யா (24) உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருவதாகவும் அவர் மூலமாக அந்த நாட்டில் மருத்துவ படிப்பில் உங்கள் மகனை சேர்த்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் சாமிநாதன் மகன் கவியரசு மற்றும் அவருடைய நண்பர் நவீன் வர்ஷன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வதாக தனலட்சுமியிடம் கூறினார்.

 

இதையடுத்து, தனலட்சுமி அவருடைய கணவரான ஜேசிபி வாகன உரிமையாளர் வேலுச்சாமி(52), அவரது மகன் ஜோகித் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இருவரிடம் சேர்ந்து ரூ 14 லட்சத்து 96 ஆயிரம் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து கவியரசு, நவீன் வர்ஷன் ஆகியோரை விமானம் மூலம் உக்ரைன் நாட்டிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பி வைத்தனர். அங்கு தனலட்சுமி  மகன் ஜோகித் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடாமல் இருவரையும் தனி அறையில் அடைத்து வைத்து, அந்நாட்டிலுள்ள தனது நண்பர்கள் மூலமாக கவியரசையும், நவீன் வர்ஷனையும் மிரட்டி வந்துள்ளார். 

 

மேலும் இருவரின் பெற்றோர்களிடம் ஜோகித் இரண்டாவது பருவத்திற்கு கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டும். பணத்தை அனுப்பி வைக்குமாறு போனில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமிநாதன் மற்றும் நவீன் வர்ஷனின் பெற்றோர் உக்ரைன் நாட்டில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த வேறு மாணவர்கள் மூலமாக விசாரித்ததில் தங்களது மகன்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை என்பதும், மாணவர்கள் விசாவில் அழைத்து வராமல் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் சிலர் கவியரசையும், நவீன் வர்ஷனையும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் சாமிநாதன் மற்றும் நவீன் வர்ஷன் பெற்றோர் தனலட்சுமி மற்றும் வேலுச்சாமியிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சாமிநாதன் இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனலட்சுமி, அவரது மகன் ஜோகித், கணவர் வேலுச்சாமி ஆகியோர் பணத்தைப் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து அவர்கள் மூன்று பேர் மீதும் கூட்டுச் சதி, ஏமாற்றுதல், பணத்தைப் பெற்று மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனலட்சுமி, வேலுச்சாமியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது மகன் ஜோகித்தை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.