police caught the woman involved in the theft and recovered the jewelry

Advertisment

திருச்சி மருதாண்டகுறிச்சி ராமநாதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி (வயது 76). இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு டவுன் பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றார். பின்னர் சமயபுரம் கோவில் பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கிய இருவரும் கோவிலுக்கு நடந்து சென்றனர். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம பெண்மணி ஒருவர் சரஸ்வதி அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தாலிச்செயினை பறித்துவிட்டு தப்பி கூட்டத்தில் மறைந்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி செய்வதறியாமல் திகைத்தார்.

பின்னர் உடனடியாக அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கணவனும் மனைவியும் சென்று புகார் அளித்தனர்.உடனே போலீசார் அந்தப் பகுதி கடைகளில் பதிவான சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் சரஸ்வதியிடம் நகையைப் பறித்த பெண்ணை கோவில் பகுதியில் சமயபுரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செல்லியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி ரேகா (42) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆறே முக்கால் பவுன் நகையும் மீட்கப்பட்டது.