Skip to main content

பொது இடத்தில் மது அருந்தியவர்களை பிடித்த காவல்துறை! கடைக்கு சீல் என எச்சரிக்கை! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

police caught those who drink alcohol in public.. cuddalore Police Commissioner sakthi ganesan warned

 

மது அருந்துபவர்கள், பள்ளி கட்டடங்கள், சாலையோர நிழற்கூடங்கள், செயல்படாமல் இருக்கும் அரசு கட்டடங்கள், மர நிழல்கள், வயல்வெளிகள் என பொது இடங்களில் மது அருந்துவதால் பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது என்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்குப் பல்வேறு புகார்கள் வந்தன. 

 

அதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

 

மேலும், ஒவ்வொரு பகுதி மக்களும் தொடர்புகொள்ள ஏதுவாக காவல் உதவி எண்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

அதில் கடலூர் - 9498100552,

சிதம்பரம் - 9498100561,

நெய்வேலி - 9498100578,

பண்ருட்டி - 9498100597,

தனிப்பிரிவு - 04142 284333,

விருத்தாச்சலம் - 9498100571,

சேத்தியாத்தோப்பு - 9498100588, 

திட்டக்குடி - 9498100605,

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு - 04142284353  ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இதனிடையே, விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதி உள்ளிட்ட போலீசார் நேற்று (28.09.2021) விருத்தாசலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 

police caught those who drink alcohol in public.. cuddalore Police Commissioner sakthi ganesan warned

 

அப்போது கடலூர் ரோடு, பாலக்கரை, கடைவீதி, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய 25 நபர்களை உடனடியாகப் பிடித்து விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். முதல்முறை என்பதால் எச்சரிக்கையுடன் அனுப்புகிறோம். இனிமேல் யாரும் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. அதுபோல் கடைகளின் முன்பு மது அருந்தினால், அந்தக் கடையின் உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களைக் கைது செய்வதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.