ADVERTISEMENT

ஓபிஎஸ் தம்பி சண்முக சுந்தரம் மீது வழக்குப்பதிவு!

05:52 PM Sep 20, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் இரண்டாவது சகோதரரான ஓ.சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சியின் 24- வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தநிலையில் ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்திற்கு அருகே ஓய்வு பெற்ற மருத்துவர்களான திருமலை மற்றும் விமலா தம்பதியினர் அவர்களது வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

ஓபிஎஸ் சகோதரர் கவுன்சிலர் சண்முகசுந்தரம் வாங்கிய இடத்தில் மருத்துவர்களின் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. இந்நிலையில் வீடு கட்டும் பணிகள் துவங்கப்படாத நிலையில் ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் தோண்டிய பள்ளத்தால் அருகே உள்ள ஓய்வுபெற்ற மருத்துவர் வீட்டின் அஸ்திவாரம் மிகவும் சேதம் அடைந்து பாதிக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனை சரி செய்வதற்காக மருத்துவர் பணியாட்களை அனுப்பிய பொழுது ஓபிஎஸ் சகோதரர் மற்றும் மருத்துவர் திருமலை தம்பதியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் திருமலை தம்பதியினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் சகோதரர் கட்டடப் பணிகளை செய்யவிடாமல் தங்களை மிரட்டி வருவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரத்திடம் கேட்ட பொழுது, ''அவர்களது இடத்தில் பணி செய்வதற்கு தான் தடையாக இருந்ததில்லை. அவர்கள் தன்னுடைய இடத்தை அபகரிப்பதற்கான நோக்கில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் கொடுத்துள்ளனர். தானும் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக நில அளவீடு செய்து அவர்களுடைய இடம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ள தான் எப்போதும் தடையாக இருந்ததில்லை'' என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT