Skip to main content

"தினமும் 200 கேஸ் போடணும்...?" - களமிறங்கிய காவல்துறை... கவலையில் வாகன ஓட்டிகள்!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

police case

 

கரோனாவிலிருந்து தற்போதுதான் மக்கள் தங்களுடைய இயல்புநிலைக்கு மாறி வருகின்றனர். கரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்த நேரத்தில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இதனால், மக்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்விக் குறியாகி இருந்தது. கடந்த மார்ச்சிலிருந்து அக்டோபா் வரை முழுமையான பாதிப்பைச் சந்தித்த மக்கள், அடுத்த இரண்டு மாதங்களில் சில தளர்வுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தற்பொழுது வரும் தகவல் பலருக்கும் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

 

இதற்கிடையில் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாக எந்தவிதப் பெட்டி கேஸும் போடாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை வளைத்து வளைத்துப் பிடித்து பெட்டி கேஸ் போட்டு வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கை எதற்காக என்று விசாரித்தோம் அதில், "தமிழகக் கூடுதல் காவல்துறை தலைவராக உள்ள ராஜேஷ் தாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்தபோது, அவருக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நெல்லை வந்தார். அப்போது திருச்சிக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவல்துறை ஆணையா், ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின், 'தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் தினமும் சுமார் 200 பெட்டி கேஸ் கண்டிப்பாகப் போட வேண்டும்' எனத் திருச்சியில் இருந்தே ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்" எனச் சொல்லப்படுகிறது.

 

இந்த உத்தரவு குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இவர் பொறுப்பேற்ற பின்பு காவல்துறை தலைவர் திரிபாதியின் அதிகாரம் சற்று குறைந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தமிழகம் முழுவதும் பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதில், இந்த பெட்டி கேஸ் போடும் உத்தரவும் ஒன்று. இந்த உத்தரவால் காவல்நிலையங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், குற்றம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வழக்குகளை விசாரணை செய்ய காவல்நிலையங்களில் இருப்பதே இல்லை. காவல்நிலையங்களில் அதிகாரிகளே இல்லாமல் அனைவரும் சாலையில் நின்று இருசக்கர வாகனங்களைப் பிடித்து கேஸ் போடும் பணியைமட்டுமே செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "தற்போதுதான் இயல்புநிலைக்குத் திரும்பிவர ஆரம்பித்துள்ளோம். கையில் வருமானம் இல்லாமல் திணறி வரும் நிலையில், ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை என்று ஒரு கேஸ், மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று ஒரு கேஸ் எனப் பதிவு செய்கின்றனர். எங்களில் பலருடைய ஒரு நாள் வருமானமே 300 ரூபாய் தான். அதில், 100 ரூபாயை காவல்துறைக்குக் கொடுத்துவிட்டுப் போவது வேதனையாக உள்ளது. அதிலும், இந்தக் கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே அரிதான காரியமாகிவிட்டது. கிடைத்த வேலையைச் செய்து கொண்டு தினக்கூலிகளாக வாழும் பலரை இப்படி மடக்கிப் பிடித்து வசூலிப்பது என்பது நியாயமற்ற செயல்" என்று கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.