Skip to main content

கர்ப்பிணியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Police arrested the youth who snatched the chain from the  police's wife

 

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமரன். இவர், இவரது மனைவி கவியரசி மற்றும் தங்கள் குழந்தையுடன் கடந்த 8ம் தேதி காலை 11 மணியளவில் தங்கள் ஊரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுப்பூசிக்கான அட்டையை (மருத்துவச் சீட்டு) வீட்டிலே மறந்து வைத்துவிட்டுக் கிளம்பியுள்ளனர்.

 

அதனால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஊருக்குத் தடுப்பூசி அட்டையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரது கர்ப்பிணி மனைவியான கவியரசியை டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருது பாலசிங்கம், பாஸ்கர், பிரகாஷ், சுந்தரராஜன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், கண்ணன், ஏட்டு சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விழுப்புரம் ஏனாதிமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம நபர் பைக்கில் வந்துள்ளார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

 

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட போலீசார் அவரை அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் 39 வயதான அறிவழகன் என்பது தெரியவந்தது. இவர் தான் கவியரசியை தாக்கிவிட்டு 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

இதையடுத்து, அறிவழகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் விசாரணை குற்றவாளியாக அடைத்துள்ளனர். குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கடலூர், நெல்லிக்குப்பம், திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.