Skip to main content

அதிமுக எம்எல்ஏ தலைமையில் திருமணம்; மாப்பிள்ளையைக் கைது செய்த போலீஸ்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 police arrested the youth who cheated the girl by pretending to be love

புதுச்சத்திரம் அருகே கீழ்பூவானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ப்ரகதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (23). இவர் கடலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  இளங்கலை கணிதம் பயின்றுள்ளார்.  இந்நிலையில் அதே கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பயின்ற குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாசங்கர் மகன் சஞ்சீவிராஜ்( 24)  இவர்கள் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சஞ்சீவிராஜ் ப்ரகதியை கடற்கரை, கோயில், சினிமா தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றியுள்ளார். பின்னர் கடந்த 2019 மார்ச் 25ஆம் தேதி கீழ்பூவானிகுப்பம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு இரவு 10 மணிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கட்டாயப்படுத்தி ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் எப்போ திருமணம் செய்து கொள்வது என கேட்டபோது திருமணம் தற்போது செய்து கொள்ள முடியாது என்றும், இவர் இவரது மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு நிச்சயம் செய்து விட்டதால் அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். பின்னர் இவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து வரும் 11-ந்தேதி அவரது மாமா மகளுடன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் காலை திருமணம் செய்துகொண்டு மாலையில் குறிஞ்சிப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற உள்ளது. திருமண பத்திரிகையை உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  கொடுத்து வந்துள்ளனர். பத்திரிகை வைக்கும் தகவல் அறிந்து கடந்த 4-ந்தேதி ப்ரகதி மருந்து குடித்துவிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதுகுறித்து விபரம் அறிந்த பெண் தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களிடம் திருமணம் செய்துகொள்ள பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 8-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தின் உண்மை தன்மை அறிந்து சம்பந்தபட்ட சஞ்சீவிராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.