Skip to main content

மூன்று வருடமாக தொடர்ந்த மர்மங்கள்; வீட்டைச் சுற்றி புதைக்கப்பட்ட ரகசியம் - திடுக்கிடவைத்த பெண்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Police arrested a gang involved in theft incidents in Madurai

 

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் வெக்கை தாங்கமுடியாத மக்கள், கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டுக்குள் வேலை பார்க்கும் நேரத்தில் இந்த திருட்டுகள் அரங்கேறி வந்துள்ளது. மேலும், திருடுவதை வீட்டின் உரிமையாளர்கள் பார்த்துவிட்டால்.. அவர்களை மிரட்டி.. அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதோடு, பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்வதாக 20 க்கும் மேற்பட்ட புகார்கள், சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. 

 

அதேபோல, பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே இருக்கும் பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடப்பதாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருட்டுச் சம்பவத்தை புலனாய்வு செய்துவந்த போலீசார், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில்.. கூடுதல் கவனம் செலுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்... ஊமச்சிகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் சிலைமான், காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். 

 

இந்த தனிப்படை காவல்துறையினர், கொள்ளை நடந்த இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். தடயம் ஏதேனும் கிடைக்கிறதா.. பாதிக்கப்பட்ட மக்கள் பேசுவதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என பல கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். அப்போது, போலீசார் நடத்திய பலகட்ட தீவிர விசாரணையில், பார்ப்பதற்கு அப்பாவிகள் போல, வயதான பெண் ஒருவரும் அவருடன் மூன்று இளைஞர்களும் சென்று இதுபோன்று பகல்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. 

 

இதனையடுத்து, அந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக முடுக்கிவிட்டனர். மூன்று ஆண்கள் உட்பட ஒரு பெண்ணை உள்ளடக்கிய இந்த கும்பல், வியாழக்கிழமை அன்று, கல்மேடு பகுதி வழியாகச் சென்றதாகவும், கல்மேடு பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட உள்ளதாகவும் ரகசிய தகவல் ஒன்று, தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, கல்மேடு சந்திப்பு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது பைக்கில் இரண்டு கூலித் தொழிலாளி இளைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் எதையோ மறைத்து வைத்திருந்தனர், இதைக் கண்டுபிடித்த போலீசார் அது என்ன என கேட்டுள்ளனர். உடனே முகம் மாறிப்போன இளைஞர்கள், “அது ஒன்னும் இல்லை சார்.. நாங்க வேலைக்காக வைத்திருக்கும் ஆயுதங்கள்” என சமாளித்துள்ளனர். 

 

இதை நம்பாத போலீசார், அந்த பைகளை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பைக்கில் கொள்ளை அடிப்பதற்கு தேவையான அத்தனை ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் காவல்துறையினர் அவர்களது ஸ்டைலில் விசராணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் இளமனூர்புதூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற நரி மற்றும் சோனைச்சாமி என தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கூடுதல் தகவல்கள் ஏதேனும் கிடைக்கிறதா என போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

 

இந்த இருவரும் இவர்களுடைய அண்ணன் பெரிய கருப்பசாமி மற்றும் அவருடைய தாயார் ஆசைப்பொண்ணு ஆகியோரும் ஒரே குடும்பாக சேர்ந்து, திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிலைமான் கருப்பாயூரணி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கோடை காலங்களில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கக்கூடிய நபர்களின் வீடுகளை கண்டறிந்து, அவர்கள் வீட்டுக்குள் சென்று, நகைகளை திருடிவந்ததும், திருடிவிட்டு அந்த பகுதியில் ஏதோ கூலி வேலைக்கு வந்தது போல, அப்பாவிகளாக நடித்தும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் மீது முன் வழக்குகள் எதுவும் இல்லாததால்.. இவர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் திணறியுள்ளனர்.

 

இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களின் வீடுகளில் சென்று விசாரணை நடத்திய போது, மேலும் பல ரகசியங்கள் வெளியானது. கொள்ளையடித்த நகைகளை இந்த  குடும்பத்தார்.. வீடுகளைச் சுற்றி புதைத்துவைத்து.. அதன்மேலே சிமெண்ட் பூசி மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வீட்டை சுற்றி வைத்திருந்த 180 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.

 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “கடந்த மூன்று ஆண்டுகளாக திறந்த வீடுகளை மட்டும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். இதனால் முப்பதுக்கும் மேற்பட்ட பழைய வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களிடம் உள்ள வீடு மற்றும் வாகனங்களை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவர்களுடன் வேறு ஏதும் கொள்ளை வழக்குகளில் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்தான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்பாக காவல்துறை விசாரணைக்கு எடுத்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

 

வீட்டைச் சுற்றி திருடிய நகைகளை புதைத்துவைத்து சிமென்ட் பூசி மறைத்து வைத்திருந்த கொள்ளைக் குடும்பத்தின் செயல் மதுரை மக்களை அதிரவைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.