திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக சென்ற செவ்வந்தி என்ற கருவுற்ற பெண் உட்பட 3 பெண்கள் அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் ராமன் என்ற காவலரால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் வைரலான நிலையில் காவலர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை பாமக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைமைகள் கண்டித்துள்ளது. பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல்துறை பொதுமக்களின் நண்பனாகச் செயல்பட வேண்டும்; அனைத்துக் காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் அமர்த்தப்பட்டு புகார் கொடுக்க வரும் அனைவரும் கனிவாக நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வசன மழை பொழிந்து வருகிறார். ஆனால், குற்றங்களை செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் காவல்நிலையங்களில் மரியாதைக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது. திமுக ஆட்சியின் காவல் அறம் இதுதானா?' எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் காவலர் ராமனை போலீசார் கைது செய்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.