Skip to main content

விருத்தாசலத்தில் பதுக்கப்பட்ட துபாய் தங்கம் - மடக்கி பிடித்த காவல்துறை

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த தே.புடையூரைச் சேர்ந்தவர் பாலையா(40). இவர், துபாய்க்கு வேலைக்குச் சென்ற நிலையில் முறையாக வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 14-ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை விமானநிலையத்திற்கு வந்து, விருத்தாசலம் அடுத்த பேரயலையூரிலுள்ள மாமியார் ராணி(52)யின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் துபாயிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் மற்றும் பார்சல்களை‌ அவரது வீட்டில் வைத்து விட்டு தலைமறைவானார். 

 

இந்நிலையில் நேற்று முன்தினம் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு கார்களில் வேப்பூர் அடுத்த தே.புடையூரிலுள்ள பாலையா வீட்டிற்கு வந்தனர். அவரது குடும்பத்திடம் துபாயிலிருந்து பாலையாவிடம்‌ வழங்கிய பார்சலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அதையடுத்து ஊராட்சி தலைவர் பாண்டியன் தலையிட்டு பொருட்களை மீட்டுத் தருவதாகக் கூறினார்.

 

அதை தொடர்ந்து ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் பாலையா மாமியார் ராணி இருவரும் மோட்டார் பைக்கில் பேரலையூருக்கு சென்று பொருட்கள், பார்சல்களை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் தே.புடையூருக்கு புறப்பட்டனர். எரப்பாவூர் -‌ தாழநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 4 பேர் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

 

இதனால் சந்தேகமடைந்த ஊராட்சி தலைவர் பாண்டியன் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடன் பாலையா வீட்டிற்கு சென்ற போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருவாடானை மாவட்டம், நம்புதாலை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன்(30), அவரது நண்பர்கள் அரியலூர் மாவட்டம், பெரிய காடுவெட்டியைச் சேர்ந்த சின்னராசு(24), திருச்சி மாவட்டம் கல்நாககோட்டையைச் சேர்ந்த விக்னேஷ்(27), திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சாகுல்ஹமீது(40), விருத்தாசலம் அடுத்த கீணணூரைச் சேர்ந்த செல்வமணி(35) என்பது தெரியவந்தது.

 

குமரேசன் தங்கம் கடத்தல் புரோக்கராக உள்ளார். கடந்த 14-ஆம் தேதி 100 கிராம் எடையுள்ள 3 தங்க கட்டிகளை பாலையாவிடம் கொடுத்து தனது உறவினர்களிடம் கொடுக்குமாறு வழங்கியுள்ளார். ஆனால் அவரது உறவினர்களிடம் தங்கக் கட்டிகளை பாலையா ஒப்படைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குமரேசன் கடந்த 15-ஆம் தேதி துபாயிலிருந்து வந்தார். இன்னோவா மற்றும் ஈடாஸ் கார்களில் வந்த 9 பேர் பாலையா வீட்டிற்குச் சென்றனர். அதில் 4 பேர் பாலையா மாமியார் ராணியை வழிமறித்து தங்கக் கட்டிகளை எடுத்து சென்றது தெரியவந்தது.


அதை தொடர்ந்து நேற்று பகல் 11:00 மணியளவில் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் இருந்த பாலையாவை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமரேசன்(30), பாலையா(40) உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் தங்கக் கட்டிகளை எடுத்து சென்ற 4 பேரை தேடி‌ வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.