Skip to main content

ஏ.டி.எம் மெஷினில் ஏற்பட்ட கோளாறு; பாஜக நிர்வாகியின் செயலால் பரபரப்பு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Police arrested a BJP worker who had a dispute with a bank employee

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வங்கியொன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியிலேயே அதற்கான ஏடிஎம் மையமும் இணைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு மணவாள நகர் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த  சில தினங்களுக்கு முன்பு இந்த ஏடிஎம் எந்திரத்தை வங்கியின் சார்பில் சர்வீஸ் செய்துள்ளனர். இதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு உதவியாக அந்தத் தனியார் வங்கியைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வந்துள்ளார். இவர், பாஜக கட்சியின் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக உள்ளார். உள்ளே ஆட்கள் நிற்பதைப் பார்த்த பின்னரும் அபிலாஷ் நேராக உள்ளே சென்றுள்ளார். அங்கு சென்றவர் தனது ஏடிஎம் கார்டை எடுத்து, ஏடிஎம் மிஷினில் நுழைத்துள்ளார். அப்போது, அங்கு சர்வீஸ் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், சார்.... இப்போ பணம் எடுக்க முடியாது சார்.... ஏடிஎம் மிஷினை சர்வீஸ் பண்றோம்... எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும், கடுப்பான அபிலாஷ், அவர்களை திட்டியதாக சொல்லப்படுகிறது. உடனே சர்வீஸ் செய்துகொண்டிருந்த ஊழியரும் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஆகியுள்ளது. இதனைக் கவனித்த அந்த வங்கியின் அசிஸ்டண்ட் மேனஜர் பிரதீப், அங்கு ஓடி வந்துள்ளார். அங்கு வந்தவர், அங்கிருந்த பாஜக நிர்வாகி அபிலேஷிடம் சென்று, சார்.... இந்த மிஷினில் சர்வீஸ் செய்யும் பணி நடக்கிறது சார்... இப்போ பணம் எடுக்க முடியாது... தயவு செய்து புரிஞ்சிக்குங்க.. என எடுத்துக்கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட பிறகும், அவர் ஏடிஎம் மிஷினை விட்டு வெளியே வராமல் நான் இதில்தான் பணம் எடுப்பேன் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான உதவி மேலாளர், அபிலேஷை முதலில் வெளியே போங்க சார்... என சத்தமாக கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அபிலாஷ், வாய்க்கு வந்தபடி உதவி மேலாளர் பிரதீப்பை திட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்கு வாதம் நடந்துள்ளது.

இந்த வாக்கு வாதத்தால் மேலும் ஆத்திரமடைந்த அபிலாஷ், வங்கி உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் வங்கி ஊழியர், பாஜக நிர்வாகியால் தாக்கப்படுவதைப் பார்த்த மற்ற ஊழியர்கள், மணவாள நகர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த அபிலாஷிடம் வங்கி ஊழிர்களிடமும் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். ஆனால், அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகி போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாஜக நிர்வாகி அபிலாஷை கைது செய்த மணவாள நகர் போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அபிலாஷ் வங்கி ஊழியரை தாக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இதன் காரணமாக சம்பவம் நடந்த ஏடிஎம் மிஷினில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ள நிலையில், குஷ்பு உட்பட பாஜகவினர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்புவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.