Skip to main content

பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த 3 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

Police arrested 3 people who robbed petrol bunk

 

ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் ரூ.25,000 கொள்ளையடித்துச் சென்றனர். 

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில், கடந்த 7ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பணியில் இருந்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் ஆகிய இருவரிடமும் மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியும், அவர்கள் கையில் கத்தியால் வெட்டியும் அவர்களிடமிருந்த ரூ.25,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

 

இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கணேசன் மேற்பார்வையில் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். 

 

இந்த நிலையில், நேற்று (12.02.2021) மதியம் ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் தமிழ் மணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன், போலீசார் ஜெயகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் புதுச்சேரி திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த டூவீலரை நிறுத்தினர். அப்போது அந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. 

 

அதில் பயணம் செய்த 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியா என்கிற நவீன் முத்துப்பாண்டியன், கணேசன் மற்றும் சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த 7ஆம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள மேற்படி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கத்திமுனையில் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், இவர்கள் இதேபோன்று பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தியபோது வண்டியிலிருந்து கீழே சாய்ந்ததில் பாண்டியா என்கிற நவீன் முத்துப்பாண்டியன் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

இதையடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்திய 3 கத்தி, ஒரு இருசக்கர வாகனம், பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.