Skip to main content

பணி நியமன ஆணையுடன் வந்த இளைஞரை காவல்நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Police arrest youth who came with appointment order

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணியில் சேர்வதற்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் அதற்கான பணி நியமன உத்தரவையும் கையில் எடுத்துக்கொண்டு பணியில் சேர்வதற்காக நேற்று (25.11.2021) ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன் என்பவரை சந்தித்து தனது பணி உத்தரவை வழங்கியுள்ளார். அதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கையொப்பம் போடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நேர்முக உதவியாளர் பிரபாகரன், “இது என்னுடைய கையெழுத்து இல்லை. மேலும் தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 

இந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவு உனக்கு யார் அளித்தது” எனக் கேட்டு அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார். அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பிரபாகரன், தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், அவர் பெயர்  குமரேசன் (28) என்றும் இவர் செஞ்சி அருகே உள்ள கடையூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞர் கூறுகையில், “சென்னையில் பிபிஏ பட்டம் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காததால் மறைமலை நகர் பகுதியில் வெல்டராக பணிபுரிந்துவந்தேன்.

 

அப்போது அங்கு ஏழுமலை என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் கூறினார். அதன்படி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், 2 லட்சம் பணம் கொடுத்தால் அந்தப் பணியைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார். அதன்படி கடந்த 19ஆம் தேதி என் வீட்டிற்கு தபால் மூலமாக இந்தப் பணி ஆணை வந்தது. அதில் 25ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணியில் சேர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த வேலைக்கான உத்தரவை எடுத்துக்கொண்டு வேலையில் சேர்வதற்காகத்தான் இங்கு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் பணி நியமன உத்தரவில் ஏழுமலையின் முகவரி ஏதும் இல்லை. பணம் பெற்றுக்கொண்டு மோசடியாக போலி பணி நியமன ஆணையைத் தயாரித்து, அதனை தபால் மூலம் குமரேசன் வீட்டிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உண்மைத் தன்மையைப் பொறுத்து போலி பணி நியமன ஆணையைத் தயாரித்துக் கொடுத்த ஏழுமலை மீது வழக்குப் பதிவுசெய்ய முடியும். மேலும், அவரை கைது செய்து விசாரித்தால்தான்  இதில் உள்ள கூடுதல் விவரங்கள் வெளியே தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.