திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் கடந்த சில மாதங்களாகவே மாயமாகி வந்தன. இந்த தொடர் சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் ஊத்துக்குளி வடக்குத் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன் திருடிய 17 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.