Skip to main content

பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Police arrest woman involved in money laundering

 

விழுப்புரம் நகரில் உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், விழுப்புரம் அருகே உள்ள ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - கோமதி தம்பதி. இவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள பிரியதர்ஷனி நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ஒரு லட்சம் மற்றும் 2 லட்சம் என்று நகரில் உள்ள பலரிடம் பணம் வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்திவந்துள்ளார். சமீப காலங்களாக பணம் கொடுத்தவர்கள் ஏலச்சீட்டு நடத்தும்போது ஏலம் கேட்டுள்ளனர். அப்படி கேட்டவர்களுக்கு அவர் பணம் கொடுக்க வேண்டும்.

 

ஆனால் அவர்களுக்கான ஏலத்தொகை பணத்தைத் தராமல் அந்தப் பணத்திற்கான வட்டித் தொகையை மட்டும் மாதாமாதம் கொடுத்துவந்துள்ளார். 2019ஆம் ஆண்டு கோமதி லதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த அடிப்படையில் அவசர உதவிக்குப் பணம் தேவை என்று லதாவிடம் 5 லட்சம் பணம் கேட்டுள்ளார். லதாவும் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து கடன்பெற்று அதை கோமதியிடம் இரண்டு தவணைகளாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை லதா திருப்பிக் கேட்டபோது மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலை ஒன்றைக் கொடுத்துள்ளார் கோமதி. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்த லதா முனைந்தபோது வங்கியில் பணம் இல்லை, அதை வங்கியில் செலுத்த வேண்டாம். தான் நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவதாக கோமதி கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியவாறு இதுவரை லதாவிடம் பணத்தைத் தராமல் ஏமாற்றிவந்துள்ளார்.

 

மேலும் கோமதி, விழுப்புரம் நகரில் உள்ள பலரிடம் சீட்டு ஏலம் நடத்துவதற்காக வசூல் செய்த பணம் மட்டுமே சுமார் ஒரு கோடிவரை இருக்கும் என கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் கொடுத்த பணம் எனக்குத் திருப்பி கிடைக்க வேண்டும்’ என்று லதா புகாரில் தெரிவித்திருந்தார். இவரது புகார் மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், கோமதி பண மோசடியில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். இதையடுத்து, கோமதியை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.