Skip to main content

தூங்கிக்கொண்டிருந்த கொள்ளையர்களை தட்டி எழுப்பி கைது செய்த காவல்துறை..! 

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 


திருச்சி மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளிடம் அவர்களது உடமைகள், கையில் வைத்திருக்கக் கூடிய கைப்பைகள், நகை, பணம், ஃபோன் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையடித்துச் செல்லக்கூடிய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று (27.04.2021) காலை கருமண்டபம், ஜெயா நகர்ப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 40 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. 

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்குள், அரிஸ்டோ ரவுண்டானா என்று சொல்லப்படும் 5 சாலைகள் சந்திக்கக்கூடிய இடத்தில், கார் ஓட்டுநர் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த ரூ. 3,000 பணத்தைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடித்துத் துரத்தியுள்ளது ஒரு கும்பல். இந்த சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதி அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தின் ஒட்டியிருந்த  புதரில் கொள்ளையடித்த நான்கு பேரும் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்களைப் பிடிக்க காவல்துறை முற்பட்டபோது, அந்த நான்கு பேரும் நான்கு திசைக்குப் பிரிந்து ஓடியுள்ளனர். அதில், ஒருவரை மட்டும் காவல்துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர். காவல்துறையில் சிக்கியவர் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. வெங்கடேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருப்பத்தூர் குளத்தூர்பட்டியைச் சேர்ந்த நாகராஜ், திருச்சி கருமண்டபம் குளத்தைச் சேர்ந்த பாபு, நாகமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என மூவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். 

 

இந்நிலையில் அந்த மூன்று பேரும், ரயில்வே ஜங்சன் பகுதியில் ஒரே இடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். உறங்கிக்கொண்டிருந்த அவர்களைக் காவல்துறையினர் தட்டி எழுப்பி, கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல மாதங்களாக இதுபோன்ற வழிப்பறி, பயணிகளைத் திசை திருப்பி கொள்ளையடிப்பது மற்றும் ரயில் நிலையங்களில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.