Police are investigating who set the teenager on fire

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது தேவனாம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் இளங்கோவன்(30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த 29ஆம் தேதி பலத்த தீக்காயங்களுடன் திருவண்ணாமலை - தேவனாம்பட்டு செல்லும் சாலையோரம் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார். அதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி உடனே அவரது குடும்பத்துக்குத் தகவல் கூறி அவர்களை வரவழைத்துக் காயத்தோடு இருந்தவரைத் தூக்கிச்சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் கலசபாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இளங்கோவன் சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி விடியற்காலை இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, “என்னை மின்சாரம் தாக்கிவிட்டது. மயங்கி கிடந்த என்னைத் தூக்கி வந்து நான்கு பேர் தீ வைத்து எரித்து விட்டனர்” எனத் திக்கித் திணறிக் கூறியுள்ளனர். இதில் அதிர்ச்சியான அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீ வைத்தவர்கள் யார் என விசாரித்து அவர்களைக் கைது செய்யவேண்டும் என இளங்கோவனின் தாய் புகார் அளித்தார். கலசபாக்கம் போலீசார் இதில் மெத்தனப் போக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இறந்த இளங்கோவனின் உடலை சென்னையில் இருந்து அக்டோபர் மூன்றாம் தேதி மாலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டு வரப்பட்டது. இதனை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் இளங்கோவின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்கி இறுதி காரியங்கள் செய்யுங்கள் நாங்கள் குற்றவாளிகளை கைது செய்கிறோம் என காவல்துறையினர் கூறினர். இதனை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

Advertisment

Police are investigating who set the teenager on fire

கடந்த இரண்டு நாட்களாக சாலை உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், ஏடிஎஸ்பி பழனி போன்றோர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதும் தீ வைத்துக் கொளுத்திய குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தைப் பெற மாட்டோம் குற்றவாளிகளை கைது செய்த பிறகு சடலத்தை பெற்றுக் கொள்கிறோம் எனக் கூறினர். இதனால் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை வரை பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படுவதால் மூன்றாவது நாட்களாக சடலம் ஆம்புலன்ஸிலேயே வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாலிபரின் உறவினர்கள் போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை தொடரும் என இரவிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், “உடலை அடக்கம் செய்யுங்கள். குற்றவாளிகள் இன்னார் தான் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. அதனால் கைது செய்ய முடியவில்லை. கண்டிப்பாக குற்றவாளிகளை கைது செய்து விடுகிறோம்” எனச் சமாதானம் பேசினர்.

அதே ஊரை சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் உருவாகி அவரை காவல்துறை அழைத்து கலசபாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவரை கைது செய்யக்கூடாது என அந்த ஊரைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதனால் அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

Advertisment

Police are investigating who set the teenager on fire

இந்நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரின் உத்தரவாததத்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

இதற்கு முன்பு இதேபோல் இரண்டு மரணங்கள் நடைபெற்றுள்ளது. அவற்றை போலிஸ் - இறந்தவர் - மின்சாரம் வைத்தவர்களிடையே பஞ்சாயத்துப் பேசி பணம் செட்டிலாகி அங்கேயே முடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தீ வைத்து எரிக்கப்பட்டதால் இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பாகியுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.