Skip to main content

கேபிள் டிவி உரிமையாளர் வெட்டி படுகொலை; மர்ம நபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

Police are actively investigating passes away cable TV owner

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர்ப் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

 

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் 45 வயதான மாதவன். இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 7 1/2 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். கோவில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்து வருவதாகவும்  கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் இன்று அதிகாலை நடைப்பயிற்சி சென்ற மாதவனை அடையாளம் தெரியாத மர்ம  நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்தக் கொலைக்கானக் காரணம் கோவில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து  லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் லீலி கொலை நடந்த இடத்திலிருந்து திருச்சி லால்குடி மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களைச் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். குற்றவாளிகளைப் பிடித்த பின்னர் கொலைக்கான முழுமையான காரணம் தெரியும் எனப் போலீசார் கூறியுள்ளனர். தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்