hjk

Advertisment

சென்னை தி.நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம்” நேற்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த சூழ்நிலையில் , கடைசி நிமிடத்தில் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் கூட்டம் மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மலேசியா பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் முனைவர் ராமசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரதமர் உருத்திர குமாரன், எழுத்தாளர் பாமரன், தியாகு செந்தில் ஆகியோருடன் தமிழீழ ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். சிலர் இணையம் வழியாகவும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ " 2009 மே 16 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று சொன்னார்கள். வழிமுறைகளை மாற்றுகிறோம் என்று பிரபாகரன் சொன்னார். ஒரு அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்மாதிரியான ஒரு அரசாக பிரபாகரனின் அரசு இருந்து வந்தது. ஆனால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதற்கு நீதி வேண்டும். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் ஈழத்தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும். இதை ஆரம்பம் முதல் சொல்லி வருபவன் நான் மட்டும் தான். சுதந்திர தமிழீழம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வல்லரசு நாடுகள் தங்கள் சுயலாபத்திற்காக சிங்களர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஈழம் அமையாமல் தடுக்கிறார்கள். ஆயுதம் இன்றி தமிழ் ஈழம் அமைந்தே தீரும். முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் தங்களைத் தீயில் தள்ளிக் கொண்டு ஈழத்திற்காக மாண்டார்கள். தமிழீழ விடுதலைக்கு எந்தெந்த வகையில் பக்க பலமாக இருக்க வேண்டுமோ அந்தந்த வகையில் பலமாக இருப்போம். சுதந்திர தமிழீழம் அமைய பாடுபடுவோம்" என்று பேசிக்கொண்டே இருந்த சூழ்நிலையில், கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை என மயிலாப்பூர் போலிசார் தெரிவித்தனர்.

ஆனால், தொடர்ந்து கூட்டம் நடக்கவே, காவல்துறையினர் தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.