Police action on A cop who gave incentives to smugglers

திருவள்ளூர் மாவட்டம், ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கடந்த 18ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், திருச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (35) கோயம்புத்தூரைச் சேர்ந்த விவேக் (27) ஆகியோர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு படை காவலர் பிரகாஷ் (27) என்பவர், இருவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்யுமாறு ஊக்கத்தொகை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

Advertisment

ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது கஞ்சா கடத்தலுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழ்நாடு சிறப்பு படை காவலர் பிரகாஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலுக்கு ஊக்கத்தொகை வழங்கிய வழக்கில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.