எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த சா.கந்தசாமி எழுத்துலகில் பிரபலமானவர். 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து இவர் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார். இந்த புதினத்தை தேசிய புத்தக அறக்கட்டளை இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்திருந்தது. சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவரின் மரணத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே! தன்மானம் - தன்முனைப்பு தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது" என்று தெரிவித்துள்ளார்.