ADVERTISEMENT

போக்ஸோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

11:35 AM Nov 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், குரும்பப்பட்டி ஒலிகரட்டூரைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (40). விவசாயி. இவர், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்குத் திருமணமாகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு ஆடு மேய்த்து வந்த 14 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நவ. 4ம் தேதி சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மகேஷ்வரன் கூறியதால் சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு சிறுமி வயிறு வலிப்பதாகக் கூறியதால் கடந்த பிப். 14ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நல நன்னடத்தை அலுவலர் க.பரமத்தி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி மகேஷ்வரன் மீது போலீஸார் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமா பானு நவம்பர் 17ம் தேதி அளித்த தீர்ப்பில், மகேஷ்வரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்து அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT