Skip to main content

“முறைகேடு செய்தவர்கள் பணிநீக்கப்பட வேண்டும்” - பாமக நிறுவனர் ராமதாஸ்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

pmk ramadoss Those who committed malpractice  Periyar University should be sacked

 

பெரியார் பல்கலை. முறைகேடுகள் குறித்த விசாரணை வரவேற்கத்தக்கது என்றும், முறைகேடு செய்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பா.ம.க. நீண்ட நாட்களாக சுட்டிக்காட்டி வந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

 

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை இது தொடர்பாக நேற்று பிறப்பித்திருக்கும் அரசாணையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு, அவற்றின் மீது உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சு.பழனிச்சாமி இ.ஆ.ப., இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பெரியார் பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டவை தான். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல புகார்களை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் புள்ளிவிவரங்களுடன் முன்வைத்திருக்கிறது. உண்மையில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் பல மாதங்களுக்கு முன்பே விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாகவே விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது; இப்போதாவது விசாரிக்கப்படவிருப்பது மனநிறைவளிக்கிறது. 

 

பல்கலைக்கழக நிர்வாகம் மீதான முதன்மையான குற்றச்சாட்டு, உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை; நூலகர், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது தான். இந்த முறைகேடுகள் நடப்பதற்கு முன்பாகவே, அவற்றை சுட்டிக்காட்டி 18.09.2022 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், துணைவேந்தரால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த இருவர் இட ஒதுக்கீட்டு விதிகளை மீறி நியமிக்கப்பட்டனர். அருந்ததியர் சமூகத்தினருக்கு கிடைத்திருக்க வேண்டிய இரு பணிகளும் துணைவேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டன.

 

தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தொடர்பாக விசாரணை நடத்த இப்போது ஆணையிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த குற்றச்சாட்டை கடந்த 24.09.2017 அன்று பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பியது. பெரியசாமி மட்டுமின்றி, அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 141 ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் போலிச்சான்றிதழ் மூலமாக பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கிட்டத்தட்ட அதே காலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிய அங்கமுத்து மீது ஆசிரியர்கள் நியமனத்தில் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணி பற்றி இன்று வரை முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை; உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை.

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான பிரேம்குமார் பொய்யான புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கப்பட்டது; பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 4 பணியாளர்கள் கடந்த ஆண்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டது என ஏராளமான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் விசாரணை வரம்பிற்குள் சேர்க்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் அரசாணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள் துணைவேந்தர், துறைத்தலைவர், துணைவேந்தரின் உதவியாளர், பதிவாளர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் நினைத்தால் இந்த விசாரணையை சீர்குலைக்க முடியும்; முறைகேடுகளுக்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் அழிக்க முடியும். அவ்வாறு நடந்தால் விசாரணைக்கு ஆணையிடப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே, விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை முடிவடையும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.