Skip to main content

கலவரத்தைத் தூண்ட விடுதலை சிறுத்தைகள் சதி! ராமதாஸ் குற்றச்சாட்டு!

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

 


பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  ’’தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை  விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய சட்டவிரோத செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; தண்டிக்கத்தக்கவையும் கூட.

 

ர்

 

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட  அதிமுக செயலாளரும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களை மக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பட்டியலின மக்களும் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அழைக்கின்றனர்.

 

அவர்களின் அழைப்பை ஏற்று பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கு வாக்கு கேட்பதற்காக செல்லும் போது, அவர்களை அந்த பகுதிக்குள் செல்ல விடாமல் தடுப்பது, தாக்குவது, அருவருக்கத் தக்க வகையில் திட்டுவது, வன்கொடுமைத் தடுப்பு பிரிவில் பொய்ப்புகார்களை கொடுப்பது உள்ளிட்ட  செயல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் காலனிக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் தலைமையிலான குழுவினர் வாக்கு கேட்டு சென்ற போது, அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் பரப்புரைக்காக   இருசக்கர ஊர்திகளில் வந்தவர்களைத் தாக்கியதுடன், வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

 

கோலியனூர் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்புக்கு சென்ற போதும், அங்கு வரிசையாக பெண்களை நிறுத்தி வைத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பரப்புரைக் குழுவினரை திட்ட வைத்துள்ளனர். தாதம்பாளையம் என்ற இடத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை சாலையம்பாளையம் காலனியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்   பிடுங்கிப் போட்டு அட்டகாசம் செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறவி, மூங்கில்பட்டு கிராமங்களிலும் அமைச்சர் தலைமையில் சென்ற பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட குழுவினரை வாக்கு சேகரிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதும் நடந்துதிருக்கிறது.

 

கடலூர் மக்களவைத் தொகுதியில் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கண்டரக்கோட்டை என்ற இடத்தில் வாக்கு கேட்பதற்காக தலித் குடியிருப்பு வழியாக  தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமையில் வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் அதிமுக கூட்டணியினர் நேற்று சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் பா.ம.க. கொடியை அகற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் பா.ம.க. தொண்டர்களை அமைச்சர் சம்பத் முன்னிலையில் தாக்கியுள்ளனர். அதேபோல், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட  தாணு நகர் என்ற இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய  தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் காயமடைந்துள்ளார்.

 

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பணப் பாக்கம் காலனியிலும் வாக்கு கேட்பதற்காக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் செல்லும் போது பா.ம.க கொடியை அகற்ற வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறு செய்தனர்; தொண்டர்களைத் தாக்கினார்கள். திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கீச்சலம் என்ற இடத்திலும் வி.சி.க இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

 

பட்டியலின மக்களில் பெரும்பான்மையினர் அதிமுக தலைமையிலான குழுவினர் தங்கள் பகுதிக்கும்  வந்து வாக்கு கேட்க வேண்டும் என்று அழைக்கின்றனர். ஆனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் திட்டமிட்டு இந்த வேலைகளை செய்கின்றனர். அவர்களின் இந்த இழிவான செயல்களைத் தட்டிக் கேட்பவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் கொடுத்து சட்டவிரோதமாக வழக்குப் பதிவு செய்ய வைக்கின்றனர். வாக்கு கேட்டு வருபவர்களிடம் இவ்வாறு தகராறு செய்தால், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்வார்கள்; அதைப்பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை அரங்கேற்றலாம் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் திட்டம் ஆகும். இப்போதே இப்படி செய்பவர்கள் தேர்தல் நாளில் இன்னும் மோசமான கலவரங்களை கட்டவிழ்க்கக் கூடும்.

 

இந்திய ஜனநாயகத்தின் வலிமையே அனைவருக்கும் வாக்குரிமை; அனைவரிடமும் வாக்கு சேகரிக்கும் உரிமை என்பது தான். அதேபோல், ஒரு கட்சியின் அடையாளமே அதன் கொடி தான். அதை அகற்றி விட்டுத் தான் வாக்குகேட்க வர வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? ஜனநாயக உரிமைகளை தடுக்கும் அதிகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதுவும் வாக்கு சேகரிக்க வரும்படி வேட்பாளரை வாக்காளர்களே அழைக்கும் நிலையில், அதைத் தடுப்பது மிகவும் மோசமான குற்றமாகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டும் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக உள்ள திமுகவின் ஒரு பிரிவினர் இத்தகைய செயல்களுக்கு மறைமுகமாக துணை போகின்றனர். திமுகவில் உள்ள மற்றொரு பிரிவினர் உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள வேறு எந்தக் கட்சியினரும் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாண்டி, பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பது அதிமுக அணியால் முடியாதது அல்ல. பட்டியலின மக்களே தங்கள் பகுதிக்கு வாக்கு கேட்க அழைக்கும் போது, அதையேற்று அவர்கள் பகுதிக்கு சென்று  வாக்கு சேகரிக்க அதிமுக அணியால் முடியும்.  மாறாக, எந்த வன்முறைக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பொறுமை காக்கின்றனர். இதே அணுகுமுறையை  அதிமுக அணியினர் தொடர வேண்டும்.

 

தோல்வி பயம் வாட்டுவதால் தான் இத்தகைய வன்முறைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இது எதிர்பார்த்த ஒன்று தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபட்டாலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சியினர் எத்தகைய எதிர்வினையிலும் ஈடுபடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் வன்முறைகள் குறித்து காவல் நிலையத்திலும், தேர்தல் ஆணையத்திடமும் முறைப்படி புகார் செய்து விட்டு, அமைதியான முறையில் அதிமுக - பா.மக.  சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும். நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

 

இந்த நேரத்தில் இன்னொரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி பட்டியலின இளைஞர்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், அச்சமுதாய தலைவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையிலும் விவேகானந்தர்களாக இருங்கள்... வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டிருந்தேன். அதில்,‘‘பட்டியலின மக்களை தவறாக வழி நடத்துபவர்களை எண்ணித் தான் வருந்துகிறேனே தவிர, அம்மக்கள் மீது பாசமும், அவர்களின் நலனில் அக்கறையும் எனக்கு எப்போதும் உண்டு. எனவே, பட்டியலின தலைவர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், அரசியல் சட்டப்படி வழங்கப்படும் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி அம்மக்கள் கல்வி, பொருளாதார அடிப்படையில்  முன்னேறுவதையும், வேலைவாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை வழி நடத்துங்கள் & சாதிக்க வேண்டிய இளைஞர்களை சீரழித்து விடாதீர்கள் என்பது தான். மொத்தத்தில் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில் விவேகானந்தராக இருங்கள்.... விலை மதிப்பற்ற அந்த சக்தியை வீணடிப்பவர்களாக இருக்காதீர் என்பது தான்’’ என்று கூறியிருந்தேன். அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன்.

 

தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் பணிகள் பாராட்டத்தக்க வகையில்  அமைந்துள்ளன. அதேநேரத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தோல்வி பயம் காரணமாக கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வேட்பாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.