Skip to main content

ஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு: குற்றவாளிகளை தண்டிப்பதே உண்மையான வீரவணக்கம் - ராமதாஸ்

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை :  ’’இலங்கையில் கண்ணியமாக வாழும் உரிமை கோரியதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் பத்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் 17,18 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் மிகக்கொடிய இனப்படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதற்கு காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

 

ம்

 

இன்றிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அப்பாவித் தமிழர்களை துப்பாக்கி குண்டுகள்,  ஏவுகணைகள் மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் வீசி கொன்றொழிக்கும் சதியில் இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக அனைத்து தமிழர்களையும் அழித்து விட வேண்டும் என்று வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது இராஜபக்சே தலைமையிலான  சிங்கள பேரினவாத அரசு. ‘‘தொப்புள்கொடி உறவுகளான எங்களைக் காப்பாற்றுங்கள்’’ என்று ஈழத்தில் இருந்து தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்கள் வந்து கொண்டிருந்தன. ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று என் போன்ற தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினோம்.

 

ஆனால், சொந்தங்களைக் காப்பாற்றுவதை விட அதிகாரத்தை அனுபவிப்பது தான் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் உருத்தெரியாத வகையில் சிதைக்கப்பட்டு, யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அழிக்கப்பட்டிருந்தன. பல லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில்   கொத்தடிமைகளை விட மிகவும் மோசமான முறையில், இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட வழியற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட தமிழர்களின்   குடும்பங்களுக்கு நீதியையும், அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசில் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை வழங்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர்.

 

மாறாக, 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை எண்ணி தளர்ந்து விடாமல், கொல்லப்பட்ட ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலை நடந்த சில நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகளாகி விட்ட போதிலும் அதேநிலை தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

பசுமைத் தாயகம்   அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்புகளாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவாலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இராஜபக்சேவை வணங்கி, பரிசுப்பெட்டிகளை வாங்கி வந்ததையும், ஐ.நாவின் பொதுச்செயலாளரை சந்திப்பதாகச் சென்று அதன் வாயில்காப்போனிடம் மனு கொடுத்து வந்ததையும் தவிர துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஈழத்தமிழர் நீதி பெறுவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.

 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் விவாதித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, அடுத்த இரு ஆண்டுகளில் நீதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதன்பின்னர்  இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதையும் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளவில்லை; இனி வரும் காலங்களிலும் சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

 

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அடுத்தடுத்தக் கட்டங்களைக் கடந்து ‘தி ஹேக்’ நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; ஐநா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்கள், சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா மேற்கொள்ள வேண்டும். அது தான் சிங்கள வெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அவர்களின் பத்தாவது நினைவு நாளில் செலுத்தப்படும் சிறப்பான வீரவணக்கமாக அமையும்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.