Skip to main content

பாமக எம்.எல்.ஏ. தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

pmk MLA Sudden turn in the related case
பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்

 

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாமகவைச் சேர்ந்த சதாசிவம். இவரது மனைவி பேபி. இவர்களுக்கு சங்கர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சங்கருக்கும் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் எம்.எல்.ஏ சதாசிவம் மகன் சங்கர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது மனோலியாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்கும்போது, சரிவரப் பதிலளிக்காமல் சண்டை போட்டு வந்ததாகச் சொல்லப்பட்டது. இது ஒரு புறமிருக்க, சங்கர் தனது மனைவி மனோலியாவிடம் நகை பணம் கேட்டு அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.

 

இதுகுறித்து மனோலியா தனது மாமனார் சதாசிவத்திடம் தெரிவித்தபோது, அவரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த மனோலியா, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து மனோலியா, சதாசிவம் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் சதாசிவம், அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே சமயம் வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் சங்கர், மனைவி பேபி, மகள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் தரப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சதாசிவத்தின் மகனும், மனோலியாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அப்போது குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தில் நடந்த கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக, நீதிபதியிடம் இருவரும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கைத் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம் இல்லை எனக் கூறி முன் ஜாமீன் கோரிய வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்