PMK Member Sumathi and her daughter passes away near salem

சேலம் அருகே, பாமக பெண் நிர்வாகி தன் மகளுடன் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Advertisment

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி ஏரிக்காட்டு வலவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், மகுடஞ்சாவடி ஒன்றிய பாமக கட்சித் தலைவராக இருக்கிறார். இவருடைய மனைவி சுமதி (49). ஏற்கனவே மகுடஞ்சாவடி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். பாமகவின் ஒன்றிய மகளிரணி தலைவியாகவும் இருந்துவந்தார்.

Advertisment

இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுடைய இரண்டாவது மகள் ஜமுனா (19). சனிக்கிழமை (29.05.2021) இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அனைவரும் படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் நீண்டநேரம் ஆகியும் சுமதியும், மகள் ஜமுனாவும் படுக்கையைவிட்டு எழவில்லை. குடும்பத்தினர் அவர்களுடைய அறையில் பார்த்தபோது சுமதியும், ஜமுனாவும் ஒரே சேலையில் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவரும், பிள்ளைகளும் கதறி அழுதனர்.

Advertisment

இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முத்துசாமி உள்ளூரில் பல பேரிடம் கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. கடன் அசல் மற்றும் வட்டியை அவர் திருப்பிச் செலுத்தாததால் பணத்தைத் திருப்பிக் கேட்டு பலர் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். பலர் அவருடைய குடும்பத்தினரை ஆபாசமாக திட்டியுள்ளனர்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மே 29ஆம் தேதி இரவும் இது தொடர்பாக தம்பதியினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுமதியும், அவருடைய மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இச்சம்பவத்தால் ஏரிக்காட்டு வலவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.