Skip to main content

“பாட்டாளி சொந்தங்களே... தமிழைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம்..” - ராமதாஸ்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

PMK Founder Ramadoss request traders for Tamil Language

 

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘தமிழைத் தேடி..’ எனும் பயணத்தை சென்னை முதல் மதுரை வரை நடத்தினார். இந்நிலையில் ராமதாஸ், தமிழைத் தேடி திட்டத்தில் அடுத்ததாக செய்ய வேண்டியவை குறித்து வணிகர்களுக்கு ஒரு மடல் எழுதியுள்ளார். 

 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் நாள் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்த ‘தமிழைத் தேடி...’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் தமிழ்கூறும் நல்லுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தேனோ, அதை விட பல மடங்கு ஆக்கப்பூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அன்னைத் தமிழைக் காப்பதற்காக நமக்கு நாமே நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இலக்கு என்பது மிகப்பெரியது என்பதால், இதுவரை அடைந்த வெற்றிகளை நினைத்து ஓய்வெடுக்க நேரமில்லை. எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நமது இலக்கின் அடுத்தடுத்த எல்லைக்கற்களை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. அதுகுறித்து நினைவூட்டுவதற்கே இந்த மடல்.

 

சென்னையிலிருந்து மதுரைக்கு எட்டு நாள்கள் பயணம் மேற்கொள்வதால் மட்டுமே அனைத்தும் சரியாகி விடும் என்ற மூட நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டிய தேவை உள்ளது; அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பாலானவை தமிழ் இல்லை என்பதையே தமிழ்மக்கள் இன்னும் உணரவில்லை; தனித்தமிழ்ச் சொற்கள் எவை? என்பதே நம்மில் பலருக்கு தெரியவில்லை; தனித்தமிழில் உரையாடுவது தகுதிக்குறைவு அல்ல... மாறாக அதுவே தனித்தகுதி என்பன உள்ளிட்ட உண்மைகளை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பது தான் எனது பயணத்தின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, நாம் பயன்படுத்துவது தமிழ் அல்ல.... தனித்தமிழ் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழைத்தேடி பயணத்திற்கு இதைவிட வேறு என்ன வெற்றி தேவை?

 

அடுத்தக்கட்டமாக நாம் செய்ய வேண்டிய பணிகள் மூன்று உள்ளன. அவற்றை முழு மனதுடன் செய்து முடிப்பது தான் அன்னைத் தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய முதன்மையான பணி ஆகும்.

 

முதல்கட்டமாக மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும் தமிழைத்தேடி இயக்கத்திற்கு பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வாயிலாக நடத்தப்படும் தமிழைத்தேடி இயக்கம் அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து அரசியல் சார்பற்றதாகவே செயல்படும். அதற்கேற்ற வகையில், தமிழைத்தேடி இயக்கத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் 10 பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாகவும், தமிழைப் பரப்புபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அன்னைத் தமிழ் மீதான நமது பற்று எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளே சான்று. 99 விழுக்காடு கடைகளின் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும், பிறமொழிச் சொற்களிலுமே எழுதப்பட்டிருக்கின்றன. இதை வணிகர்களின் குற்றமாகக் கருத முடியாது. மாறாக, எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிச் சொற்கள் என்ற வேறுபாட்டை அவர்கள் அறியாதது தான் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்படாததற்கு காரணம் ஆகும்.

 

இவற்றையெல்லாம் விளக்கி வணிகர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெகுவிரைவில், 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாள் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 575 எண் கொண்ட அரசாணையில் இடம்பெற்றுள்ள கூறுகளின் அடிப்படையில் பெயர்ப்பலகைகளை மாற்றி அமைக்க வணிகர் சங்க பொறுப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறிப்பிடப்பட வேண்டிய முன்னேற்றம் ஆகும்.

 

அடுத்தக்கட்டமாக, கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்ற வேண்டியதன் தேவையை ஒவ்வொரு வணிகரும் உணரச் செய்ய வேண்டும். அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வணிகர்களுக்கு வழங்குவதற்கான துண்டறிக்கை கட்சித் தலைமையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூருக்கு தேவையான எண்ணிக்கையில் அச்சிட்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று வழங்க வேண்டும்; பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டியதன் தேவை பற்றி விளக்க வேண்டும். அது குறித்த விவரங்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

 

மூன்றாவதாக, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவையெல்லாம் தனித்தமிழ் சொற்கள், எவையெல்லாம் பிறமொழிக் கலப்புச் சொற்கள் என்பதை நமது மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே, கடந்த 20.03.2005-ஆம் நாளில் சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பிறமொழிக் கலப்புச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தெரிவிக்கும் பலகைகளை நாம் அமைத்தோம். இப்போது அந்த பணியை நாம் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது. தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் அத்தகைய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க. பொறுப்பாளர்கள் அத்தகைய பலகைகளை தங்களின் பகுதியில் அமைக்க வேண்டும். அந்த பலகைகளின் திறப்பு நிகழ்வை அனைவரும் அறியும் வகையில் எளிதாக நடத்த வேண்டும். இயன்ற இடங்களுக்கு நானே நேரில் வந்து பலகைகளைத் திறந்து வைக்க அணியமாக இருக்கிறேன்.

 

பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு வழங்கியுள்ள இந்த 3 பணிகளும் மிகவும் எளிமையானவை. நீங்கள் செய்யும் இந்த பணிகள் தமிழன்னைக்கு செய்யும் தொண்டு ஆகும். இந்தப் பணியை நீங்கள் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்; உங்களை வெகுவாக பாராட்டுவேன். நீங்கள் செய்யும் இந்த பணி, தமிழைத் தேடி பயணத்தால் எனக்கு ஏற்பட்ட களைப்பை போக்கும். ஆகவே, பாட்டாளி சொந்தங்களே... அனைவரும் ஒன்றுபடுவோம், அன்னைத் தமிழைக் காக்கும் பணியைச் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.