Skip to main content

அடுத்தடுத்து திமுகவில் இணையும் பாமக நிர்வாகிகள்!!! -தி.மலை வடக்கு மா.செ. அதிரடி!!!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

PMK executives to join DMK  thiruvannamalai district

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யார், பெரணமல்லூர் பகுதிகள் பாமகவினர் பலமாக உள்ள பகுதிகளாகும். தீவிரமான பாமக தொண்டர்கள் கட்சி தலைமை மீது சமீபமாக அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தியை சரிச்செய்ய பாமக தலைமை எந்த முயற்சியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இனி பாமகவில் இருந்தால் தங்களுக்கு வளர்ச்சியில்லை, மக்களுக்கும் பாதுகாப்புயில்லை என கட்சி மாறி செயல்பட முடிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ( பொறுப்பு ) பதவியில் தரணிவேந்தனை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தது. வந்தவாசி தொகுதியை சேர்ந்த தரணிவேந்தன், வந்தவாசி தொகுதியில் உள்ள பாமக அதிருப்தியாளர்களை திமுகவுக்கு கொண்டு வரும் வேலையை செய்ய துவங்கியுள்ளார். 

 

PMK executives to join DMK  thiruvannamalai district

 

பாமகவில் அதிருப்தியாகவுள்ள வந்தவாசி ஒன்றியம் பாமக இளைஞர் அணியை சேர்ந்த மஞ்சுநாதன் தலைமையில் செம்பூர், அத்திப்பாக்கம், சேதாரகுப்பம் பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பாமகவினரை அக்டோபர் 2ந்தேதி கட்சிக்குள் இணைத்தார். 


தெள்ளார் ஒன்றியம் கீழ்வெள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் திலகவதி குப்புசாமி தலைமையில் கீழ்வெள்ளியூர், ஜெங்கம்பூண்டி, தெள்ளார், சீயமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிமுகவினரும், வந்தவாசி கிழக்கு ஒன்றியம் குறிப்பேடு அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் ஏ.ராஜா தலைமையிலும், பாமகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏ.கார்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோரும், வந்தவாசி நகரம் கே.மணி தலைமையில் 50 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு அழைத்து வந்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திமுகவில் இணைத்தார். 

 

அப்பகுதியில் திமுக தற்போது பாமகவில் இருந்து விலகி வருபவர்களை வரவேற்று இணைத்துக்கொள்கிறது. இதனால் பாமகவின் வலிமையான பகுதியை திமுக உடைக்கிறதோ என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.