Skip to main content

"தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்கு முயலக்கூடாது" - அன்புமணி ராமதாஸ் 

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

pmk chief anbumani ramadoss talks about thenpennaiyaru river issue  

 

தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையிலான தென்பெண்ணை ஆற்று நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மார்ச் 14-ஆம் நாளுக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு அம்மாநிலத்தில் 112 கி.மீ மட்டுமே பாய்கிறது. அதை விட 50% அதிகமாக 180 கி.மீ தொலைவுக்கு தமிழ்நாட்டில் பாயும் தென்பெண்ணையாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

 

தென்பெண்ணையாற்றின் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதில் கர்நாடகம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தென்பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு காண 3 மாதங்களில் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று திசம்பர் 14-ஆம் நாள் ஆணையிட்டது. அதன்படி நேற்றைக்குள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதன் கடமையை இதுவரை நிறைவேற்றவில்லை. தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அதை செயல்படுத்தும் படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. நடுவர் மன்றம் அமைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு முன்பாக கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு, நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்கவில்லை.

 

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைப்பு ஆகும். அந்த இலக்கணத்தின்படி மத்திய அரசு செயல்படுகிறது என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடுவர் மன்றத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு மத்திய அரசு செயல்படாததற்கு காரணம் அரசியல் தான். கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 24-ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதற்கான  தேர்தல் அட்டவணை எந்த நேரமும் வெளியிடப்படக்கூடும். இத்தகைய நேரத்தில் தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைத்தால் அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான் நடுவர் மன்றம் அமைப்பதை மத்திய அரசு தாமதமாக்குகிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும், காவிரி ஆற்று நீர் சிக்கலில் எவ்வாறு தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டனவோ அதேபோல் தான் தென்பெண்ணையாற்று சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு சட்டத்தை மீறி அணை கட்ட மத்திய அரசு தான் உதவியது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் சிக்கலிலும் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல், தென்பெண்ணையாற்று சிக்கலிலும் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைப்பதற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் தான் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி சிக்கலைப் போலவே தென்பெண்ணையாறு சிக்கலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் ஏற்பாட்டில் இரு மாநிலங்களுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன. அதனால் நடுவர் மன்றம் அமைப்பது மட்டும் தான் பெண்ணையாறு சிக்கலுக்கு தீர்வு ஆகும். அதை உணர்ந்து தான் உச்சநீதிமன்றமும் அத்தகைய தீர்ப்பை அளித்தது. அதை நிறைவேற்றுவதும், உழவர்கள் நலனைக் காப்பதும் தான் மத்திய அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்கு முயலக்கூடாது.

 

எனவே, தென்பெண்ணையாற்று சிக்கலுக்கு தீர்வு காண இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். அவ்வாறு அடுத்த சில நாட்களுக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு தவறினால், மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.