Skip to main content

கரோனா பரவலைத் தடுக்க 144 தடை போதாது; முழுமையான ஊரடங்கே தீர்வு! அன்புமணி 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதால், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவுக்கு பதிலாக முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை மாலை 6.00 மணி முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க வகை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 18&ஆம் தேதி 158-ஆக இருந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று 418 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம்; இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

Anbumani Ramadoss



கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இந்தியாவின் 19 மாநிலங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும்  மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கொரோனா நோயை தடுக்க முடியும் என்பதால் தான், முழுமையான ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. கோரியது.
 

ஆனால், தமிழக அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 144-ஆவது பிரிவின்படி அத்தியாவசியமற்ற அலுவலகங்கள் மற்றும் கடைகளை மூடுவது, அனைத்து வகை போக்குவரத்தையும் ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மாலை 06.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  1897&ஆம் ஆண்டின் இந்திய தொற்றுநோய் சட்டத்தின் 2-ஆவது பிரிவை பயன்படுத்து அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூடவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசின் ஆணையில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பு இல்லை.
 

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 144-ஆவது பிரிவை நடைமுறைப்படுத்துவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதை மட்டும் தான் அந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 5 பேர் வரை ஓரிடத்தில் கூட தடை இல்லை. இது எப்படி நோய் பரவுவதை கட்டுப்படுத்தும்?
 

கொரோனா நோய் உலகின் கொடிய நோய்களில் ஒன்றாகும். கொரோனா பாதிக்கப்பட்டவரின் 3 அடி சுற்றளவில் ஒருவர் இருந்தால் அவருக்கும் நோய் தொற்றிக் கொள்ளும். இதைத் தடுக்க வேண்டுமானால் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்பது தான் சிறந்த வழியாகும். அவ்வாறு செய்ய 1897-ஆம் ஆண்டின் இந்திய தொற்றுநோய் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 
 

ஏதேனும் ஒரு தொற்றுநோயை கட்டுப்படுத்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி செய்ய முடியாத எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு இந்த சட்டத்தின் 2&ஆவது பிரிவு வகை செய்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, 144 தடை சட்டத்தை பயன்படுத்தி ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது  நோய்ப்பரவலை தடுக்க உதவாது.

 

கொரோனா நோய்த்தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால்,  இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மாலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஒருநாள் என்பது மிக நீண்ட காலம் ஆகும். ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆகவே, கொரோனா நோய் தடுப்புக்கான முழு ஊரடங்கு ஆணையை இன்று மாலை முதல் நடைமுறைப்படுத்த  வசதியாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்றே முடித்துக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
 

தமிழ்நாட்டில் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளையும், 11&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் வியாழக்கிழமையும் நிறைவடைகின்றன. அவற்றை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 11 மற்றும் 12&ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள். இது கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதற்கே வழி வகுக்கும்.
 

எனவே, கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதால், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவுக்கு பதிலாக முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். அதுவும் இன்று இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஏற்கனவே இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அளவு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், முதற்கட்டமாக 3000 ரூபாயும், வாழ்வாதார இழப்பு ஏப்ரலிலும் நீடித்தால் வாரத்திற்கு ரூ.3,000 வீதமும் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மாலை வெளியிடவிருக்கும் விரிவான அறிக்கையில் இடம்பெறச் செய்யுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.