Skip to main content

பிரதமரின் கிஸான் திட்ட முறைகேடு... போலி விவசாயிகள் பணத்தை திரும்பிச் செலுத்தக் கோரி கிராமங்களில் தண்டோரா!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

PM Kissan samman nithi farmers should repay the amount

 

பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தில், போலியான புரோக்கர்கள் மூலம் போலி ஆவணங்களைக் கொடுத்து, போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு பெரும் மோசடி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை செய்து முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து வருகின்றனர். 

 

இந்தத் திட்டத்தில், ஏராளமான விவசாயி அல்லாத நபர்கள் புரோக்கர்கள் மூலம் 500, 1000 என கமிஷன் பெற்றுக்கொண்டு அவரவர் வங்கிக் கணக்கிற்கு 6,000 ரூபாய் வரை பணத்தை அனுப்பி உள்ளனர். இந்தத் திட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி வரை மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தவறான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு அவரவர் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பல்வேறு குழுக்கள் மூலம் விசாரணை செய்து கண்டறியப்பட்டுள்ளது. இதில் தவறான ஆவணங்கள் கொடுத்து பணம் பெற்றுள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளதோடு அந்தக் கணக்கில் இருந்த தொகை அரசு கணக்கிற்கு பரிமாற்றப்பட்டு வருகிறது.

 

இந்தத் திட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தை முன்கூட்டியே எடுத்துச் செலவு செய்து விட்டதால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறும் பொருட்டு உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வடகுரும்பூர், குஞ்சரம், இறையூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் சார்பில் தண்டோரா மூலம் தவறான வழிகளில் பணம் பெற்றவர்கள் உடனடியாக வங்கியில் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 

அதையடுத்து பலர் பணத்தை வங்கிகளில் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பிரதமர் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் நிவாரணம் பெறுவதற்காக ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்துள்ளோம். தற்போது நாங்கள் பெற்ற 2,000 ரூபாயை திருப்பி வங்கியில் செலுத்தி வருகிறோம். ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுத்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2,000 ரூபாய் பெற்ற நாங்கள் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுத்ததை யாரிடம் போய் திரும்பிக் கேட்பது என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.

 

அப்படிப்பட்டவர்களிடம் அரசு பணத்தை முறைகேடாகப் பெற்றதற்கு போலீஸ் வழக்கு, சிறை, நீதிமன்றத் தண்டனை என்று உங்களைப் போன்றவர்கள் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து வருவதைக் கண்டு சந்தோஷம் அடையுங்கள். அரசுப் பணத்தை ஏமாற்றி பெற முயன்றதற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். தவறான வழியில் பெற்ற பணத்தை முறையாக திருப்பிச் செலுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள் அதிகாரிகள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

100வது உழவர் ரயில் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! 

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
modi ji

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

 

இந்தநிலையில், 100வது உழவர் ரயில் (கிசான் ரயில்) சேவையை இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இந்த நூறாவது உழவர் ரயில் இயங்கவுள்ளது 

 

விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் இந்த உழவர் ரயில் சேவை, முதன்முதலில் மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார் மாநிலத்தின் தனபூர்  இடையே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இதனை தொடங்கி வைத்தார். அதன் பிறகு படிப்படியாக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு இன்று நூறாவது உழவர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ரூபாய் 123 கோடி மீட்பு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

pm kisan scheme tamilnadu farmers rs 123 seized

தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயலாக்கப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (24/10/2020) நடைபெற்றது. தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய தமிழக வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, "வேளாண் துறையால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்காச் சோளம் பயிரிடப்பட்டு படைபுழு தாக்கம் அதிகம் உள்ளதால் அவை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் உணவு தானிய உற்பத்தி சொட்டுநீர் பாசன திட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும். தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை 123 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு லட்சம் பேரிடம் இருந்தும் பணத்தை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது."இவ்வாறு தட்சிணாமூர்த்தி கூறினார்.

 

தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, அரசு ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.