Skip to main content

விவசாயிகளுக்கான 'பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி' திட்ட முறைகேடு! ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு! 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

r

 

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

 

அதேசமயம் இந்தத் திட்டம் ஒருசிலருக்கு மட்டுமே செயல்படுத்தப் படுவதாகவும் பல விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. அதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்ட, வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளைத் தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்தப் பகுதி வேளாண் துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைத்தள ரகசிய குறியீட்டு எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2,000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 10-ஆம் தேதி இத்திட்டத்தில் 6-ஆவது தவணை தொகையான ரூபாய் 17, 500 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். அப்போது மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2,000 வரவு வைக்கப்பட்டது. 

 

இந்தத் திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 60,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் மோசடியாக 30,000 பேர் சேர்க்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கு சமீபத்தில் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக 2,000 ரூபாய் பணமும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாகப் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

கடலூர் அடுத்த காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளாக இல்லாதோருக்கு, தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது. மேலும் இதுபோன்று மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

வேளாண்மைத் துறை துணை இயக்குனர் தலைமையில் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்தப் பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தபோது திருவள்ளூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ரகசிய குறியீட்டு எண் மூலம் மோசடியாக பயனாளிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இதுகுறித்து விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

Ad

 

இதனிடையே இன்று பிரதமரின் 'கிசான் நிதி' உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை செய்தார். 

 

அப்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் முறைகேடாகச் சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.