Skip to main content

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு தரவில்லை என்ற கோபத்தில் தற்கொலைக்கு முயன்றவர் கைது...!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

PM Home scheme issue

 

 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் பசுமை வீடு திட்டத்திலும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள கூவாகம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜ்குமார் வயது 25. 

 

சென்னையில் ஜே.சி.பி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வருவது வழக்கம். இவருக்கு திருமணமாகி ஊரில் மனைவி பிள்ளைகள் என குடும்பம் உள்ளது. இவர்களுக்கு இட நெருக்கடி காரணமாக வீடு இல்லாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு ஒரு வீடு வழங்குமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். 

 

அதிகாரிகள் இவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற ராஜ்குமார், நேற்று மாலை 3 மணி அளவில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி  போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீசார், ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது ஒரு ஊரில் ஆண்டுக்கு சில பயனாளிகளை தேர்வு செய்து வீடு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பயனாளிகளுக்கு தொடர்ந்து வீடு வழங்கப்படும். மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த ராஜகுமாரின் தாயார் மீராவிற்கும் அவரது அண்ணன் ராஜுவுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.  

 

வரும் ஆண்டுகளில் ராஜ்குமாருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் படிப்படியாகத்தான் ஏழை எளிய பயனாளிகள் பயன் பெறுவார்கள். அதற்கு காத்திருக்காமல் ராஜ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது, வருத்தத்துக்குரியது என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராஜ்குமார் தற்கொலை முயற்சி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த திருநாவலூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வீடு கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.