Skip to main content

பிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து!!

Published on 11/07/2019 | Edited on 12/07/2019

மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு இந்த வருடம்  ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது அரசாணை வெளியிடப்பட்டது.

 Plastic Prohibition Confirmed.. highcourt order!


இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 

 Plastic Prohibition Confirmed.. highcourt order!


பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே அடைத்து கொண்டுவரும் பிளாஸ்டிக்கிற்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வாதிடப்பட்டது.

 Plastic Prohibition Confirmed.. highcourt order!


இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் கூறினார். ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க உத்தரவிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்த அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வாதிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா ,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வினியோகம் என அனைத்திற்கும் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை செல்லும் எனவும், அரசாணையை எதிர்த்து தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் பாட்டில்களில் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிளாஸ்டிக் தடை அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.