plastic case highcourt

மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த தடையானது 2019 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அமலில் உள்ளது.

இருப்பினும், தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சமூக ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைதீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அடங்கிய அமர்வு, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறிழைத்தவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு,அரசாணையை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..இவை குறித்த விவரங்களுடன் விரிவான அறிக்கையை, இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர மாநகராட்சிக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.