Newlyweds

நவீன காலத்தில் திருமணம் நடந்தவுடன் பல சம்பிரதாய சடங்குகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் புதுமணப் பெண்களின் இயற்கை மீது கொண்டிருக்கும் பற்று அனைவரையும் வியக்க வைக்கிறது. அண்மையில் நடந்த திருமணங்களே இதற்கு ஆவணங்களாக கண் முன்னே நிற்கிறது. அரியலூர் மாவட்டம்வி. கைகாட்டி அருகில் உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தில் புனிதா மணிகண்டன் செட்டித்திருக்கோணம் சிவன் கோயில் அருகில் உள்ள ஏரிக்கரையிலும், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் இசையரசி பாலமுருகன் தம்பதியர் கோவிந்தபுத்தூர் சிவன் கோயில் வளாகத்திலும், நாகமங்கலம் கிராமத்தில் விஏஓ வாக பணியாற்றும் திருநாவுக்கரசு தனது மனைவி பிரன்னிதா உடன் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வண்ணான் குளம் நீர்நிலையிலும் மரக்கன்றுகளை நட்டனர். திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்துடன் வந்து மரக்கன்றுகளை நட்டது மிகப்பெரிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இதுகுறித்து அரியலூர் மாவட்டத்தின் முன்னோடி இயற்கை ஆர்வலர் தங்க சண்முக சுந்தரம் கூறும்போது, “சமீபகாலமாக இயற்கையை மீட்டெடுப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. விதைகளை பெண்கள் கையில் கொடுத்து விதைக்க சொல்வது மரபு. இயல்பாகவே கருவை சுமப்பவர்கள் பெண்கள் என்பதனாலோ என்னவோ, பெண்களிடம் விதைகளை பராமரிக்கும் பொறுப்பினை வழங்கி உள்ளனர் நம் முன்னோர்கள். பெண்கள் மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் விரைவில் அரியலூர் மாவட்டம் பசுமையாக மாறிவிடும்” என்றார்.

Advertisment