
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் நாகுடி காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமம் கொடிவயல். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்மு இவர்களுக்கு 7 வயதில் ஆதிஸ்வரன் என்ற மகன், நாலரை வயதில் இனியவள் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பழைய மண் சுவர் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று(10.12.2024) இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு அம்முவும் அவரது மகள் இனியவளும் ஒரு இடத்திலும் ஆதிஸ்வரன் மற்றொரு இடத்திலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் உள்பக்கம் உள்ள மண் சுவர் கடந்த வாரம் பெய்த மழையில் ஊறிப் போய் இருந்து தானாக உடைந்து சாய்ந்ததில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி இனியவள் மேல் கொட்டியுள்ளது. பதறியடித்து எழுந்த தாய் அம்மு மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமி இனியவளை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குச் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த தகவல் காட்டுத் தீயாக கிராமத்திற்குள் பரவ கிராம மக்கள் இனியவள் வீட்டில் குவிந்துள்ளனர். மழை இல்லாத நேரத்தில் மண் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து நாகுடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.