Skip to main content

தமிழ்நாடு சட்டப்பேரவையும், தலைவர்களின் படங்களும்....

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Pictures of the Tamil Nadu Legislative Assembly and its leaders ....

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே இடம்பெற்றுள்ள பிற தலைவர்களின் படங்கள் குறித்து பார்க்கலாம். 

 

தேசத்திற்குத் தொண்டாற்றிய தலைவர்களை நினைவுக்கூறும் வகையிலும், அவர்களது சேவையினைக் கவுரவப்படுத்தவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் 1948ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி முதன்முதலாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்துவைத்தார். இது சட்டப்பேரவையில் இடம்பெற்ற முதல் படம். 

 

1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் இராஜாஜியின் உருவப்படத்தை, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு திறந்துவைத்தார். சட்டப்பேரவையில், ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது அவருக்குத் திறக்கப்பட்ட உருவப்படம் என்றால் அது இராஜாஜயின் படம் மட்டுமே.

 

பின்னர், 1964ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருவள்ளூரின் திருவுருவப் படத்தை, அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் ஹுசேன் திறந்துவைத்தார். இதன் பின் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அண்ணாவின் உருவப்படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார். 

 

இதைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது 5 தலைவர்களின் உருவப்படங்கள் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படம், சட்டப்பேரவையில் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவரால் திறக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர், முத்து ராமலிங்க தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாஜலம் திறந்துவைத்தார். 

 

1992ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராமசாமி படையாட்சியாரின் படத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

 

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அன்று வ.உ.சி., ப. சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப் படங்களையும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள படங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - தேதியை அறிவித்த சபாநாயகர்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
nn

தமிழக ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  வருகின்ற பிப்.19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து 29 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், வருகின்ற 21ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

ஆளுநர் உரையை தயாரிப்பது அரசின் வேலை. அரசு அந்த பணியை சரியாக செய்யும். போன வருடம் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட சர்ச்சை நம்மால் ஏற்பட்டது அல்ல. சட்டமன்ற பேரவை தலைவராலோ அல்லது அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த வருடம் நன்றாக இருக்கும்'' என்றார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ''சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்கு தான் உண்டு என நானும் சொல்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபாலும் அதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்'' என்றார்.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.