PFI offices in Coimbatore sealed

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது.

Advertisment

கடந்த அக்.1 ஆம் தேதி சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. புரசைவாக்கம் மண்டல உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள தடைசெய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகங்களுக்கு சீல்வைக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் இரண்டு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேடு மற்றும் வின்சென்ட் ரோட்டில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.